தோனி பெயர் போட்ட ஜெர்ஸி.. ஆசையாய் வந்த ரசிகர்கள்.. ஒரே ஏமாற்றம்.. சிஎஸ்கே எதிர்காலம் கேள்விக்குறி
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் சொந்த மைதான போட்டி, ஒரு கசப்பான உண்மையை உரக்கச் சொல்லியுள்ளது. மைதானம் முழுவதும் மஞ்சள் நிற ஜெர்சிகளால் நிறைந்திருந்தாலும், அங்கிருந்த சூழல் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
இந்தப் போட்டியில் தோனி ஆடாத நிலையிலும், மைதானத்தின் ஒவ்வொரு மூலையிலும் ரசிகர்கள் தோனியின் 7ஆம் எண் கொண்ட மஞ்சள் நிற ஜெர்சியையே அணிந்திருந்தனர். எப்படியாவது கடைசி நிமிடத்தில் மாற்றம் ஏற்பட்டு தோனி போட்டியில் விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தோனி தசைப்பிடிப்பு காரணமாக ஆடும் லெவனில் இல்லை என்ற செய்தி தெரிந்தவுடன், சேப்பாக்கத்திற்கே உரிய அந்த மின்சார வேகம் காணாமல் போனது.

சிஎஸ்கே அணியின் புதிய முன்னணி வீரரான சஞ்சு சாம்சன் மற்றும் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் ஜெர்சிகளை அணிந்த ரசிகர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பஞ்சாப் கிங்ஸ் எதிர்த்து விளையாடிய நிலையில் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜெர்சி அணிந்த ஓரிரு ரசிகர்கள் ஆங்காங்கே இருந்தனர். ருதுராஜ் ஒரு சிறந்த கேப்டனாகவும், சஞ்சு சாம்சன் அதிரடி வீரராகவும் இருந்தாலும், தோனி ஏற்படுத்திய அந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பு இன்னும் இவர்களிடம் மாறவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
இதனால் தோனிக்குப் பிறகு சிஎஸ்கேவின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது, தோனி இல்லாமல் போனால் சிஎஸ்கே அணிக்கு எதிர்காலத்தில் நான்கு சிக்கல்கள் ஏற்படலாம்.
தனிநபர் ஈர்ப்பு: 20 ஆண்டுகளாக சிஎஸ்கே என்றாலே அது தோனி தான். அவர் இல்லாதபோது அந்த பிராண்ட் மீதான ஈர்ப்பு குறைய வாய்ப்புள்ளது. ரசிகர்கள் கிரிக்கெட்டை விட 'தல' தோனியை பார்க்கவே அதிகம் வருகின்றனர்.
மைதான பலம்: சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கேவின் கோட்டையாக இருப்பதற்கு ரசிகர்களின் பேரிரைச்சலே முக்கிய காரணம். உற்சாகம் குறைந்தால் அது வீரர்களின் செயல்பாட்டையும், எதிரணியின் பயத்தையும் குறைத்துவிடும்.
வணிக ரீதியான பாதிப்பு: டிக்கெட் விற்பனை முதல் விளம்பரங்கள் வரை அனைத்தும் தோனியை மையப்படுத்தியே உள்ளன. அவர் முழுமையாக ஓய்வு பெறும்போது இது வருவாயைப் பாதிக்கலாம்.
புதிய சாதனையாளர்கள்: ருதுராஜ், சஞ்சு சாம்சன், சிவம் துபே போன்றோர் திறமையானவர்கள். ஆனால் அவர்கள் தோனியைப் போல ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடிக்க இன்னும் பல சாதனைகளைச் செய்ய வேண்டும்.
தோனி இல்லாமல் சிஎஸ்கே போட்டிகளை வெல்லலாம், கோப்பைகளையும் கூட வெல்லலாம். ஆனால், மைதானத்தை நிரம்பி வழியச் செய்யும் அந்த வெறித்தனமான ரசிகர் கூட்டத்தைத் தக்கவைப்பதே அந்த அணிக்கு இருக்கும் உண்மையான சவால். தோனி எனும் சகாப்தம் முடிவுக்கு வரும்போது, சிஎஸ்கே தனது புதிய அடையாளத்தை எப்படிக் கட்டமைக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே அதன் எதிர்காலம் அமையும்.


Click it and Unblock the Notifications