“சேப்பாக்கத்தில் கால் வைக்கும் போது பயத்தில் இருந்தேன்”.. உண்மையை சொன்ன கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய பஞ்சாப் அணி, 18.4 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது. இந்த வெற்றிக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது பயம், அணியின் திட்டம் மற்றும் வீரர்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், "உண்மையைச் சொல்லப்போனால், இந்த (சேப்பாக்கம்) மைதானத்திற்குள் நுழையும்போது ஒருவித பயம் கலந்த கவலை எனக்கு இருந்தது. ஆனால் நாங்கள் விளையாடிய விதம், குறிப்பாக அந்த ஆரம்பம் மிகவும் சிறப்பாக அமைந்தது. பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவரும் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்தனர். அவர்கள் அமைத்துக் கொடுத்த அந்த வலுவான அடித்தளம் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு வேலையை எளிதாக்கியது. பல ஆண்டுகளாக அவர்கள் இப்படித்தான் விளையாடி வருகிறார்கள். அவர்களின் அந்த ஆரம்பம் அணியின் ரன் வேகத்தை நிலைப்படுத்த உதவியது" என்றார்.

பிரியன்ஷ் ஆர்யாவின் அதிரடி குறித்துப் பேசிய அவர், "208 ரன்கள் போன்ற ஒரு பெரிய இலக்கை துரத்தும்போது 11 பந்துகளில் 39 ரன்கள் கிடைத்தால் அதைவிடச் சிறந்த தொடக்கம் வேறொன்றும் இருக்க முடியாது. பேட்டிங் செய்ய இது ஒரு சிறந்த ஆடுகளம். முதலில் 3 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தோம், ஆனால் அதன்பிறகு அதிரடியாக ரன் சேர்த்தோம். தொடக்க வீரர்கள் கொடுத்த அந்த வேகம் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தந்தது" எனப் பாராட்டினார்.
அணியின் ரகசியம் குறித்துப் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், "டிரெஸ்ஸிங் ரூமில் நாங்கள் எதுவும் திட்டமிட்டுச் செய்யவில்லை. ஆனால் ஒன்று மட்டும் முடிவு செய்திருந்தோம். வெளியே இருப்பவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக விளையாடாமல், அணிக்குள் ஒருவருக்கொருவர் பார்த்து வியக்கும் வகையில் விளையாட வேண்டும் என முடிவு செய்தோம். இது ஆட்டத்தில் எங்களுக்கு ஒரு தெளிவைத் தருகிறது. வெளியே இருப்பவர்களை விட, அணிக்குள் ஒருவருக்கு ஒருவர் சவால் விட்டுக்கொண்டு விளையாடுகிறோம். முதல் இரண்டு போட்டிகளிலேயே அனைவருக்கும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அழுத்தமான சூழல்களை எப்படிக் கையாள வேண்டும் என்ற அனுபவத்தைத் தருகிறது" என்றார்.
பந்துவீச்சு வியூகம் குறித்து விளக்கிய அவர், "யுஸ்வேந்திர சாஹல் எவ்வளவு சிறந்த பந்துவீச்சாளர் என்பது நமக்குத் தெரியும். அவருக்கு இன்னும் ஒரு ஓவர் மீதம் இருந்தது. ஆனால் சிஎஸ்கே அணியில் உள்ளூர் வீரர்கள் சுழற்பந்து வீச்சைச் சிறப்பாக எதிர்கொள்ளக்கூடியவர்கள். எனவே அந்த நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டு பந்துவீச முடிவு செய்தேன். சாஹல் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். எனக்கு எப்போதெல்லாம் சந்தேகம் வருகிறதோ, அப்போதெல்லாம் அவரிடம் செல்வேன்" என்றார்.
கடைசியில் ஒரு எச்சரிக்கையையும் அவர் விடுத்தார், "அதே நேரத்தில் ஸ்லோ ஓவர் ரேட் விவகாரத்தில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். கடைசி 2 ஓவர்களில் 5 பீல்டர்கள் உள்வட்டத்திற்குள் வரும்போது, பந்துவீச்சாளர்களுக்குப் பந்துவீச ஒரே ஒரு லைன் மட்டுமே கிடைக்கிறது. இது சவாலான விஷயம். இதில்தான் நாங்கள் இனி கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார் ஸ்ரேயாஸ் ஐயர். இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications