சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய இரண்டாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சிஎஸ்கே அணி சமீப காலமாக மிகவும் மோசமாக விளையாடுகிறது. கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய 6 ஆட்டங்களில் சிஎஸ்கே அணி வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வென்றிருக்கிறது.
இதன் மூலம் சிஎஸ்கே அணி சமீபகாலமாக எவ்வாறு விளையாடுகிறது என்பதை இது காட்டுகிறது. இந்த நிலையில் முதல் போட்டியில் அடைந்த தோல்வியிலிருந்து வெற்றிப் பாதைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்புமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், நாங்கள் முதலில் பந்து வீசுகின்றோம். சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் இதுதான் அவர்களுடைய முதல் போட்டி.

எனவே அழுத்தம் என்பது சிஎஸ்கே அணி மீதுதான் இருக்கும். நாங்கள் பாசிட்டிவாக இருக்க விரும்புகின்றோம். எனக்கு கையில் அடிபட்டது. ஆனால் நான் அதைப் பற்றி எதிர்மறையாக எதுவும் பேச மாட்டேன். எனது கை நன்றாக தான் இருக்கின்றது. நாங்கள் நல்ல அணியை பெற்று இருக்கின்றோம். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றோம்.
எங்களுடைய திறமைக்கு ஏற்ற வகையில் நாங்கள் விளையாட விரும்புகின்றோம். கடந்த போட்டியில் செய்த தவறை இந்த போட்டியில் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. கடந்த சீசனில் நாங்கள் எவ்வாறு இருந்தோமோ, அதே மன அளவில் தான் இந்த சீசனில் விளையாடுகின்றோம்.
எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று ஸ்ரேயாஸ் கூறினார். தொடர்ந்து பேசிய சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ், ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருக்கின்றது. எனவே ஆடுகளம் பெரிய அளவு மாறாது என்று நினைக்கின்றேன். ஏப்ரல் மாதம் என்பதால் இரவில் பனிப்பொழிவும் அதிகமாக இருக்காது என நம்புகிறேன். எனவே பெரிய இலக்கை நிர்ணயித்து அதனை தற்காத்துக் கொள்வது நல்ல முடிவாக இருக்கும்.
கடந்த சீசன் எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. பல தவறுகளை நாங்கள் செய்தோம். டி20 போட்டிகளில் அந்த தவறுகள் நடப்பது இயல்புதான். ஆனால் இது எல்லாம் முடிந்த கதை. தற்போது நாங்கள் ஒரு தருணத்தில் ஒரு போட்டி என்ற நிலையில் ஆயத்தமாகி வருகின்றோம். ஒரு போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றோம். இதுதான் சிஎஸ்கே அணியில் வெற்றிக்கு காரணமாக இருக்கின்றது.

டாப் ஆர்டரில் வீரர்கள் ரன்குவித்து நல்ல அடித்தளம் அமைக்க வேண்டும். இதனால் தான் சாம்சன் உடன் நான் பார்ட்னர்ஷிப் சேர்ந்து இருக்கின்றேன். எங்கள் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இளம் வீரர் பிரசாந்த் வீர், மேத்யூ ஷாட்க்கு பதிலாக களம் இறங்குகிறார் என்று ருதுராஜ் தெரிவித்துள்ளார்.