பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026 போட்டியில், விராட் கோலியின் விக்கெட்டைத் தொடர்ந்து சிவம் துபே கொண்டாடிய விதம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 7 ரன்களில் இருந்தபோது, ஆட்டத்தின் 3-வது ஓவரில் சிவம் துபே ஒரு எளிதான கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டார். விராட் கோலி போன்ற ஒரு வீரருக்கு கேட்ச் விடுவது என்பது ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு தவறு என்பதால், சிவம் துபே மிகுந்த அழுத்தத்தில் இருந்தார்.
அடுத்து, 5-வது ஓவரில் அன்சுல் கம்போஜ் வீசிய பந்தை விராட் கோலி தூக்கி அடித்தார். இம்முறை லாங் ஆன் திசையில் இருந்து ஓடி வந்த சிவம் துபே, லாவகமாக அந்த கேட்ச்சை பிடித்து கோலியை வெளியேற்றினார். கேட்ச் பிடித்தவுடன் மிகுந்த ஆக்ரோஷத்துடன் கத்திய சிவம் துபே, ஒரு குறிப்பிட்ட இந்தி கெட்ட வார்த்தையை பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவி வருகின்றன.

ஒரு காலத்தில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய சிவம் துபே, அதே அணியின் சீனியர் வீரரான விராட் கோலியை நோக்கி இத்தகைய வார்த்தையைப் பயன்படுத்தியது ஆர்சிபி ரசிகர்களைக் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. சிவம் துபே விராட் கோலியை பார்த்து தான் இவ்வாறு கூறினாரா? அல்லது கேட்ச்சை பிடித்த உற்சாகத்தில் அந்த வார்த்தையை சொன்னாரா? என்பது தெளிவாக தெரியவில்லை.
விராட் கோலி 28 ரன்களில் ஆட்டமிழந்த போது ஆர்சிபி 4.3 ஓவர்களில் 37 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், கோலியின் விக்கெட் ஒரு அமைதிக்கு பின் வந்த புயலாக மாறியது. பிலிப் சால்ட், தேவதத் படிக்கல், கேப்டன் ரஜத் படிதார் மற்றும் முக்கியமாக டிம் டேவிட் ஆகியோர் சிஎஸ்கே பந்துவீச்சை துவம்சம் செய்தனர். டிம் டேவிட் மற்றும் ரஜத் படிதார் ஜோடியை கட்டுப்படுத்த முடியாமல் சிஎஸ்கே திணறியது. இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணியின் 3-வது அதிகபட்ச ஸ்கோராகப் பதிவானது.
263/5 - புனே வாரியர்ஸ் இந்தியாவுக்கு எதிராக (2013)
262/7 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக (2024)
250/3 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக (2026)
248/3 - குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக (2016)
241/7 - பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக (2024)

251 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆர்சிபி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிவம் துபேவின் அந்த ஆக்ரோஷமான கொண்டாட்டம் ஒருபுறம் விவாதத்தைக் கிளப்பினாலும், மைதானத்தில் ஆர்சிபி-யின் ஆதிக்கமே மேலோங்கி நின்றது.