CSK: "தயவுசெய்து எந்த வீரரையும் திட்டாதீர்கள்.." சிஎஸ்கே ரசிகர்களுக்கு அஸ்வின் வேண்டுகோள்!
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமான தொடக்கத்தைச் சந்தித்துள்ளது. தான் விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 10வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ரன் ரேட் அடிப்படையில் -2.562 என்ற மிக மோசமான நிலையில் இருக்கும் சிஎஸ்கே அணியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும் இந்திய அணியின் ஜாம்பவனுமான ரவிச்சந்திரன் அஸ்வின் ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான கோரிக்கையை விடுத்துள்ளார். சிஎஸ்கே அணியில் இருக்கும் வீரர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அஸ்வின் கூறுகையில், "சிஎஸ்கே ரசிகர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து எந்த வீரரையும் சமூக வலைதளங்களில் விமர்சிக்காதீர்கள் அல்லது திட்டாதீர்கள். அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் உங்களது ஆதரவைத் தாருங்கள். ஒரு அணியின் ரசிகராக இருப்பது என்பது வெறும் வெற்றியை மட்டும் கொண்டாடுவது அல்ல. சிஎஸ்கே வென்ற 5 ஐபிஎல் கோப்பைகள் என்பது ஒரு மிகப்பெரிய வரலாறு. ஆனால், அந்த வரலாற்றின் பாரத்தை ஆயுஷ் மத்ரே அல்லது உர்வில் படேல் போன்ற இளம் வீரர்கள் மீது சுமையாக ஏற்றாதீர்கள்" என்றார்.
மேலும் அவர் பேசுகையில், "இளம் வீரர்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியுடனும் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் இப்போதுதான் கற்று வருகிறார்கள். இன்னும் 2 வருடங்களில் இந்த அணி யாராலும் வீழ்த்த முடியாத ஒரு பலமான அணியாக மீண்டும் மாறும். அதுவரை அவர்களுக்கு உத்வேகம் அளிப்பதுதான் உண்மையான ரசிகர்களின் கடமை" எனத் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் வெறும் 127 ரன்களுக்கு சுருண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 210 ரன்கள் குவித்தும், பந்துவீச்சாளர்கள் சொதப்பியதால் தோல்வியைத் தழுவியது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா வெறும் 11 பந்துகளில் 39 ரன்கள் விளாசி சிஎஸ்கே பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார்.
பேட்டிங்கில் ஆயுஷ் மத்ரே 73 ரன்கள் விளாசி அசத்தினாலும், பந்துவீச்சில் சிஎஸ்கே படுமோசமாகச் செயல்பட்டது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வெறும் 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தினார். அதிரடி ஆல்ரவுண்டர் சிவம் துபே மற்றும் அறிமுக வீரர் பிரசாந்த் வீர் ஆகியோருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படாதது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. தோனி இல்லாத நிலையில், சிஎஸ்கே அணி மீண்டு வருமா? என்ற கேள்வியுடன் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications