சென்னை: 2026 ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வி அடைந்தது. கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சென்னை அணி 127 ரன்களுக்குச் சுருண்டாலும், அந்த அணியின் ஜேமி ஓவர்டன் மட்டுமே ஓரளவு ரன் குவித்து ஆறுதல் அளித்தார். அத்துடன் அவர் ஒரு புதிய சாதனையைப் படைத்து தோனியை முந்தி இருக்கிறார்.
சிஎஸ்கே அணி 82 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்து நின்றபோது களம் இறங்கிய ஜேமி ஓவர்டன், நிலைத்து நின்று விளையாடி 36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 8-வது அல்லது அதற்கு கீழ் வரிசையில் களம் இறங்கி அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு 2024-ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக தோனி எடுத்த 37 ரன்களே சாதனையாக இருந்தது. தோனியின் அந்தச் சாதனையை ஜேமி ஓவர்டன் தற்போது முறியடித்துள்ளார்.

இந்தப் போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் வரிசை ஆரம்பம் முதலே சொதப்பியது. விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். ராஜஸ்தான் அணியின் நந்ரே பர்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் அனல் பறக்கும் பந்துவீச்சில் சிக்கி, சென்னை அணி வெறும் 8 ஓவர்களில் 57 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ஜேமி ஓவர்டனின் இந்தப் போராட்டத்தால் மட்டுமே சென்னை அணி 127 ரன்களை எட்டியது.
128 ரன்கள் என்ற சுலபமான இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், ஐபிஎல் வரலாற்றில் 3-வது அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்தாார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 38 ரன்களும், கேப்டன் ரியான் பராக் 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

சிஎஸ்கே அணி இந்தப் போட்டியில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருந்தாலும், ஜேமி ஓவர்டனின் இந்தப் போராட்டம் அந்த அணிக்கு ஒரு சிறிய ஆறுதலாக அமைந்துள்ளது. அதே சமயம், ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. வரும் போட்டிகளில் சிஎஸ்கே இந்தத் தோல்வியில் இருந்து எப்படி மீண்டு வருமா? .