IPL 2026: சஞ்சு சாம்சன் செய்த செயல்.. கடுப்பான கிளாசன்.. ஓடி வந்த சிவம் துபே… சமாதானம் செய்த அம்பயர்
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான முக்கியமான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், இரு அணிகளின் விக்கெட் கீப்பர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன் மற்றும் ஹைதராபாத் வீரர் ஹென்றிச் கிளாசன் இடையே ஏற்பட்ட இந்த நேரடி மோதலால் மைதானத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
ஹைதராபாத் அணி 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்த போது, ஆட்டத்தின் 15-வது ஓவரில் இந்தச் சம்பவம் அரங்கேறியது. சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது வீசிய பந்தை, அதிரடி வீரர் ஹென்றிச் கிளாசன் இறங்கி வந்து அடிக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டில் படாமல் நேராக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கைகளுக்குச் சென்றது. மின்னல் வேகத்தில் செயல்பட்ட சஞ்சு சாம்சன் விக்கெட்டுகளைத் தகர்த்தார்.

எகிறிய கிளாசன் - கொதித்த சஞ்சு
மூன்றாவது நடுவரின் சோதனையில், கிளாசனின் கால் நூலிழையில் அந்தரத்தில் இருந்தது உறுதியானதால் 'அவுட்' எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 25 பந்துகளில் 47 ரன்கள் குவித்து அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த கிளாசன், அவுட் ஆன ஆத்திரத்தில் மைதானத்தை விட்டு வெளியேறாமல் நின்றார். அப்போது சஞ்சு சாம்சன் ஏதோ ஒரு கருத்தைச் சொல்ல, கிளாசன் ஆவேசமடைந்து சிஎஸ்கே வீரர்கள் நின்றிருந்த இடத்திற்கு மிக அருகே வந்து சஞ்சுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பதிலுக்கு சஞ்சு சாம்சனும் ஆக்ரோஷமாகப் பேச, இரு வீரர்களும் ஒருவரையொருவர் முறைத்துப் பார்த்தபடி நின்றனர். நிலைமை கையை மீறிச் செல்வதைக் கண்ட பந்துவீச்சாளர் நூர் அகமது, சஞ்சு சாம்சனை பின்னோக்கிப் பிடித்து இழுத்து சமதானம் செய்தார். மறுபுறம் சிவம் துபே ஓடி வந்து கிளாசனை பிடித்துக் கொண்டார். இறுதியில் கள நடுவர்கள் ஓடி வந்து இருவரையும் விலக்கி விட்டனர். அதன் பின்னரே கிளாசன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
ஹைதராபாத் அபார வெற்றி
இந்த மோதலுக்குப் பின் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. கேப்டன் ருதுராஜ் 15 ரன்களில் ஏமாற்றினாலும், பிரெவிஸ் 44 ரன்களும், கார்த்திக் சர்மா 32 ரன்களும் எடுத்தனர். கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி, 19 ஓவர்களிலேயே 181 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற போதிலும், மைதானத்தில் நடந்த இந்த கசப்பான சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிளே-ஆப் வாய்ப்புக்காக இரு அணிகளும் தீவிரமாகப் போராடி வருவதால் ஏற்பட்ட அழுத்தமே இந்த மோதலுக்குக் காரணம் எனத் தெரிகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. நடுவர்கள் இது குறித்து போட்டி அதிகாரிகளிடம் அறிக்கை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications