சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இந்த மினி ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கின்றோம், எந்த வீரர்களை விடுவிக்கின்றோம் என்பதை அறிவித்துவிட்டது.
அதன்படி சிஎஸ்கே அணி தங்களிடம் இருந்த இரண்டு நியூஸிலாந்து வீரர்களான கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவை நீக்கி இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பதிரானாவையும் நீக்கிவிட்டனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி மினி ஏலத்தில் எந்த வீரர்களை தேர்வு செய்யும் என்பது குறித்து அந்த அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், வரும் மினி ஏலத்தில் மேக்ஸ்வெல் மற்றும் லியான் லிவிங்ஸ்டோன் உள்ளனர். எனக்கு கண்டிப்பாக தெரியும், பிளமிங்கிற்கு மேக்ஸ்வெல்லை மிகவும் பிடிக்கும்.
இதனால் அவரை நோக்கி சிஎஸ்கே காய் நகர்த்தும். ஏனென்றால் மேக்ஸ்வெல் போன்ற ஒரு வீரரை எப்படி கையாள வேண்டும் என்று சிஎஸ்கேவுக்கு மட்டும்தான் நன்றாக தெரியும். நான் மேக்ஸ்வெல்லை ஒரு பேட்ஸ்மேன் ஆக கருதுவதை விட, ஒரு பவுலராக தான் கருதுகின்றேன். அதுவும் ஐபிஎல் தொடரில் அப்படித்தான் பார்க்க வேண்டும்.
ஏனென்றால் மேக்ஸ்வெல்லின் பேட்டிங் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு பவுலராக அவர் இன்னும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சிஎஸ்கே அணி மேக்ஸ்வெல்லின் பந்துவீச்சை நன்றாக பயன்படுத்திக் கொள்ளும் என்று நம்புகிறேன். ஒருவேளை அவர் பேட்ஸ்மேனாக கிளிக் ஆனார் என்றால் அது மிகப் பெரிய பிளஸ் ஆக சிஎஸ்கேவுக்கு மாறிவிடும்.
இதேபோன்று தென்னாப்பிரிக்கா வீரர் டோனாவன் ஃபெரரியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்று விட்டார். ஜெய்ப்பூர் மைதானம் அவருக்கு ஏற்ற வகையில் இருக்கும். பந்து பேட்டுக்கு நன்றாக வரும். பெரிய பவுன்சும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் போல் இருக்கும். இதனால் அவர் மிகப்பெரிய தாக்கத்தை அங்கு ஏற்படுத்துவார் என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.