மும்பை: ஐபிஎல் 2026 ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை வாங்குவதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக ஆர்வம் காட்டாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ஐந்து முறை சாம்பியனான அவர்கள், கிரீனுக்காக சிறிது நேரம் ஏலம் கேட்டாலும், அவரைப் பெறாவிட்டால் அதைப் பெரிய இழப்பாகக் கருதாது என்றும் கூறியுள்ளார்.
சிஎஸ்கே ₹43.40 கோடி நிதியுடன் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடக்கும் மினி ஏலத்திற்குச் செல்கிறது. இந்த ஏலத்தில் 4 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 9 வீரர்களை வாங்கலாம். இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, "ஒரு வீரருக்கு ₹25-30 கோடி செலவழிப்பது சென்னை அணியின் பாணியல்ல," என்று குறிப்பிட்டார்.

கிரீனுக்கான சிஎஸ்கேவின் வியூகத்தைப் பற்றி ஆகாஷ் சோப்ரா விளக்கினார்: "கேமரூன் கிரீனுக்காக சிஎஸ்கே சிறிது ஏலம் கேட்கலாம், பின் தேவை இல்லை எனில் விலகிவிடும். சிலசமயம் மற்ற அணியின் விலையை உயர்த்தவே இது நிகழலாம். அவர் கிடைக்காமல் போனால் சிஎஸ்கேவுக்குப் பிரச்சினையில்லை."
"கேமரூன் கிரீன் மீது சிஎஸ்கே அதிக ஆர்வம் காட்டாதுபோல் தோன்றுகிறது. ஆனால் நடுவரிசை பேட்ஸ்மேனுக்கு கவனம் செலுத்த வேண்டியிருக்கும். டாப் 6 வரிசை நன்றாகத் தோன்றினாலும், அதில் சற்று அனுபவக் குறைவு தெரிகிறது. வெளிநாட்டு வீரர்களைக் கொண்டு இந்த இடைவெளியை நிரப்பலாம்,"
"லியாம் லிவிங்ஸ்டனை சிஎஸ்கே விரும்பலாம். டெவான் கான்வேயை மீண்டும் வாங்கவும் வாய்ப்புள்ளது. ஜானி பேர்ஸ்டோ அணிக்கு அதிகம் பொருந்தமாட்டார். ஆர்டரின் கீழே ஆடக்கூடிய ஜேமி ஸ்மித் மற்றும் டேவிட் மில்லர் மீதும் ஆர்வம் காட்டலாம்." தனது மிகப்பெரிய நிதியுடன் குறைந்தபட்சம் இரண்டு வெளிநாட்டு பேட்ஸ்மேன்களையாவது வாங்குமாறு அவர் பரிந்துரைத்தார்.
"ரவி பிஷ்னோய்க்காக சிஎஸ்கே அதிக பணம் செலவழிப்பார்கள், ஏனெனில் அவர் அணிக்கு கட்டாயம் தேவை. நூர் அஹ்மதுக்கு ஒரு சரியான பங்காளி தேவை," என்றார். கர்ன் சர்மா, ராகுல் சஹார் போன்றோர் இருந்தாலும், "ரவி பிஷ்னோயை சிஎஸ்கேதான் வாங்கும். வேறு எந்த அணியாலும் அவ்வளவு பணம் செலவழிக்க முடியாது," என ஆகாஷ் சோப்ரா உறுதியாகக் கூறினார்.