சென்னை, எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 'ரோர் 26' நிகழ்வில், சிஎஸ்கே அணி, 'WSTL' எனும் சிறப்பு திட்டத்தை, தங்களது அணியின் தீவிர ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. சிஎஸ்கே ரசிகர்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே போட்டிகளுக்கான டிக்கெட்டை பெறுவது என்பதே போராட்டமாக அமைகிறது. பலரும் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த சூழலில் தான், சிஎஸ்கே அணி தங்களுடைய தீவிர ரசிகர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

WSTL திட்டத்தில் தேர்வு செய்யப்படும், உறுப்பினர்களுக்கு ஒரு வரவேற்பு கிட், பிரத்தியேக லாயல்டி ஸ்டோரை அணுகவும், அத்துடன் போட்டி டிக்கெட்டுகளை முன்கூட்டியே பெறும் வாய்ப்பு ஆகியவை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரசிகர்களுக்கு சிஎஸ்கே வீரர்களுடன் சந்திக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

WSTL உறுப்பினராகப் பதிவு செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் பதிவு செய்ய வேண்டும். ரோர் 26 நிகழ்வில், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சூப்பர் ரசிகர் சரவணனுக்கு முதல் WSTL உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
WSTL திட்டம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸின் நிர்வாக இயக்குநர் கே.எஸ். விஸ்வநாதன் பேசுகையில், "எங்கள் ரசிகர்கள் தான் சிஎஸ்கே-வின் இதயம் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம், மேலும் பல ஆண்டுகளாக அவர்களின் அசைக்க முடியாத ஆதரவு உண்மையிலேயே நம்ப முடியாதது."

WSTL அறிமுகத்தின் மூலம், ஒரு அர்ப்பணிக்கப்பட்ட ரசிகர் திட்டம் வழியாக அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த ஒரு அர்த்தமுள்ள வழியை உருவாக்கினோம். இந்த முயற்சி அவர்களின் ஆர்வத்திற்குப் பரிசளிப்பதோடு, அவர்கள் விரும்பும் அணிக்கு அவர்களை மேலும் நெருக்கமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.