அபுதாபி: 2026 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இன்று (டிசம்பர் 16) அபுதாபியில் நடைபெறவுள்ள மினி ஏலத்திற்கு முன்னதாக, நேற்று இரவு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிசிசிஐ இந்தத் தகவலை அணிகளின் உரிமையாளர்களிடம் ரகசியமாக தெரிவித்துள்ளது. தேதிகள் அறிவிக்கப்பட்டாலும், முதல் போட்டி எங்கே நடைபெறும் என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. குறிப்பாக சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி உள்ளது.
ஐபிஎல் வழக்கப்படி, முந்தைய சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற அணியின் சொந்த மைதானத்தில்தான் அடுத்த சீசனின் முதல் போட்டி மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும். 2025-ம் ஆண்டு ஆர்சிபி (RCB) அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. எனவே, விதிகளின்படி 2026 ஐபிஎல் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தான் நடக்க வேண்டும்.

ஆனால், கடந்த முறை ஆர்சிபி வெற்றி பெற்றதைக் கொண்டாடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து இன்னும் தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை.
ஐபிஎல் சிஇஓ ஹேமங் அமீன் கூறுகையில், "சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) அரசிடம் இருந்து நிபந்தனையுடன் கூடிய அனுமதியைப் பெற்றுள்ளது. ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விதிமுறைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே அங்கு முதல் போட்டியை நடத்த அனுமதிக்க முடியும்," என்று தெரிவித்துள்ளார். இதனால் நடப்பு சாம்பியனாக இருந்தும், ஆர்சிபி அணி தனது முதல் போட்டியைச் சொந்த மண்ணில் ஆடுமா என்பது சந்தேகமாகியுள்ளது.
இன்று நடைபெறும் ஏலத்தில் மொத்தம் 350 வீரர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் கூடுதலாக 19 வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த வீரர்களின் எண்ணிக்கை 369-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களில் மலேசிய வீரர் விரன்தீப் சிங், தென்னாப்பிரிக்காவின் கைல் வெரைன், ஈதன் போஷ் மற்றும் ஜார்க்கண்ட் வீரர் விராட் சிங் ஆகியோர் அடங்குவர். மதியம் 2:30 மணிக்குத் தொடங்கும் ஏலத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.