டெல்லி: குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியடைந்ததற்கு டேவிட் மில்லரை குறை கூற முடியாது என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 211 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய டெல்லி அணி வெற்றி பெற கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 5வது பந்தை எதிர்கொண்ட அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் சிங்கிள் ஓட மறுத்துவிட்டார். மறுமுனையில் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் நின்றிருந்தார்.
கடைசி பந்தில் பிரசித் கிருஷ்ணா மிகச் சிறப்பாக பந்துவீச, அதில் மில்லர் ரன் எடுக்கத் தவறினார். பைஸ் முறையில் ரன் ஓட முயன்ற போது குல்தீப் ரன் அவுட் ஆனார். இதனால் டெல்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு மில்லரின் தவறான முடிவே காரணம் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறுகையில், மில்லர் அந்த 5வது பந்தில் சிங்கிள் ஓடி குல்தீப் யாதவிடம் வாய்ப்பை கொடுத்திருக்க வேண்டும் என போட்டி முடிந்த பின் பேசுவது எளிது. ஆனால், முந்தைய ஓவர்களிலும் சரி, அந்த ஓவரிலும் சரி அவர் பந்தை மிகச் சிறப்பாக அடித்து ஆடிய விதம் அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கும். தன்னால் நிச்சயம் வெற்றி ரன்னை அடிக்க முடியும் என்ற அந்த அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அவர் எடுத்த முடிவை நாம் குறை சொல்ல முடியாது. அவர் திட்டமிட்டபடி ரன் வராததற்கு காரணம், பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த கடைசி பந்து மிகச் சிறப்பான டெலிவரியாக அமைந்தது தான் என மில்லருக்கு ஆதரவாக பேசினார்.

இதேபோல இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனும் மில்லருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கடைசி பந்தில் தன்னால் நிச்சயம் 1 ரன்னாவது எடுத்து ஆட்டத்தை சமன் செய்துவிட முடியும் என மில்லர் உறுதியாக நம்பினார். குல்தீப் யாதவ் கடைசி பந்தை எதிர்கொண்டு ஒருவேளை அவுட் ஆகிவிட்டால் என்ன செய்வது என அவர் தயங்கியிருக்கலாம். குறைந்தபட்சம் சிங்கிள் அல்லது பவுண்டரி, சிக்சர் அடிக்கலாம் என்பதே அவரது மனதில் ஓடியிருக்கும். வெற்றிக்கு மிக அருகில் டெல்லி அணியை தனி ஆளாக கொண்டு வந்த மில்லரை இந்த ஒரு விஷயத்திற்காக குறை கூறக் கூடாது என தெரிவித்தார்.