IPL 2026: “அதை தாங்கும் மனநிலை எங்களுக்கு இல்லை.. எல்லாம் முடிஞ்சு போச்சு”.. அக்சர் வேதனை
டெல்லி: சொந்த மண்ணில் மீண்டும் ஒரு படுதோல்வியை சந்தித்து நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி பரிதாப நிலையில் நிற்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் ஒட்டுமொத்தமாக சொதப்பிய டெல்லி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து மோசமான தோல்வியை தழுவியது. இந்த படுதோல்விக்கான முக்கிய காரணம் என்ன என்பதை டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் மிகுந்த வேதனையுடன் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
சரிந்த பேட்டிங் வரிசை
புதுடெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க வீரர்களான கே.எல். ராகுல் (23) மற்றும் பதும் நிசங்கா (50) ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர்.

ஆனால், அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹர்ஷித் ராணா (8), சமீர் ரிஸ்வி (3), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (2) என வரிசையாக வெளியேறினர். கேப்டன் அக்சர் படேல் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்க, அசுதோஷ் ஷர்மா மட்டும் ஓரளவுக்கு போராடி 39 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா தரப்பில் கார்த்திக் தியாகி மற்றும் அனுகுல் ராய் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின் ஆலன் அதிரடி சதம்
143 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, ரஹானே மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஏமாற்றம் அளித்தனர். ஆனால், மறுபுறம் 'புயலாக' மாறிய பின் ஆலன், டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவருக்குத் துணையாக கேமரூன் கிரீன் 33 ரன்கள் எடுத்தார். அதிரடி ஆட்டம் ஆடிய பின் ஆலன் வெறும் 47 பந்துகளில் சிக்ஸருடன் தனது சதத்தை பூர்த்தி செய்தார். முடிவில் கொல்கத்தா அணி 14.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
அக்சர் படேல் வேதனை
தோல்வி குறித்துப் பேசிய கேப்டன் அக்சர் படேல், "நாங்கள் நிர்ணயித்த இலக்கு மிகவும் குறைவு. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததுதான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. வெறும் 2 அல்லது 3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. விக்கெட்டுகள் சரியும்போது அழுத்தத்தை கையாளும் மனநிலை எங்களிடம் இல்லை. இந்த தோல்வியின் மூலம் எங்களது பிளே ஆப் வாய்ப்பு முடிந்துவிட்டது. இனி வரும் போட்டிகளில் பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பளித்து, அடுத்த ஆண்டுக்கான அணியைத் தயார் செய்வதில் கவனம் செலுத்துவோம்" என விரக்தியுடன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
