IPL 2026: 'இந்த தோல்வி எங்களுக்கு தேவைதான்’.. தவறு செய்து விட்டோம் என புலம்பிய அக்சர் படேல்
டெல்லி: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 264 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்தும் டெல்லி கேபிடல்ஸ் அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த வரலாற்றுத் தோல்விக்கு பிறகு பேசிய டெல்லி கேப்டன் அக்சர் படேல், தனது அணியின் பீல்டிங் மற்றும் பந்துவீச்சை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் டெல்லி அணி எங்கு சறுக்கியது, கேப்டன் அக்சர் படேல் ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேஎல் ராகுல் 67 பந்துகளில் 152 ரன்களும், நிதிஷ் ராணா 44 பந்துகளில் 91 ரன்களும் விளாசினர். ஆனால், இந்த பிரம்மாண்ட இலக்கை பஞ்சாப் அணி 18.5 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 265 ரன்கள் எடுத்து அசால்ட்டாக சேஸிங் செய்தது. பஞ்சாப் தரப்பில் பிரப்சிம்ரன் சிங் 26 பந்துகளில் 76 ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 71 ரன்களும் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

இந்த படுதோல்வி குறித்து டெல்லி கேப்டன் அக்சர் படேல் கூறுகையில், ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகச் சாதகமாக இருந்த நிலையில், பந்துவீச்சாளர்களுக்கு நாம் களத்தில் ஆதரவு தரவில்லை என்றால் இந்த தோல்வி தேவைதான். இது ஒரு சிறிய மைதானம் என்பதால் அதிக சிக்சர்கள் பறக்கும் என்பது எங்களுக்கு முன்பே தெரியும். ஆனால், கிடைக்கும் சில வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் அடுத்தடுத்து கேட்சுகளை கோட்டைவிட்டால் பந்துவீச்சாளர்களால் எதுவும் செய்ய முடியாது. பவர்பிளே ஓவர்களில் எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியதும், பீல்டிங்கில் கோட்டை விட்டதும் தான் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றார்.
மேலும் அக்சர் கூறுகையில், இந்த ஆடுகளத்தில் 264 ரன்கள் என்பது ஒரு சிறப்பான ஸ்கோர். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் அதிகபட்ச சாதனை ஸ்கோரும் இதுதான். இது போன்ற ஆட்டங்களில் அதிர்ஷ்டம் சற்று சாதகமாக இருந்து, கேட்சுகளை சரியாக பிடித்திருந்தால் நாங்கள் தொடர்ந்து 2 அல்லது 3 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கலாம். நாங்கள் தோல்வியடைந்த பல போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று கைநழுவியவை தான். போட்டியின் முக்கியமான தருணங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் வந்து ஒரே தவற்றை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பதை ஏற்க முடியாது. எங்கு தவறு நடக்கிறது, எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து மீண்டும் பரிசீலிப்போம் என வேதனையுடன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications