IPL 2026: டெல்லி அணி திரில் வெற்றி.. பஞ்சாப் கிங்ஸ்க்கு மீண்டும் தோல்வி..சூடு பிடித்த டாப் 4 பந்தயம்
தர்மசாலா: ஐபிஎல் 2026 தொடரில் தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மோதின. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள்) மற்றும் தொடக்க ஆட்டக்காரர் பிரியன்ஷ் ஆர்யா (33 பந்துகளில் 56 ரன்கள்) ஆகியோர் அரை சதங்கள் அடித்து அணிக்கு வலு சேர்த்தனர்.
பஞ்சாப் அணியின் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் (18 ரன்கள்) தொடக்க ஜோடி 41 பந்துகளில் 78 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கம் அளித்தது. ஐயருடன் இணைந்த கூப்பர் கார்னாலி 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். மேலும், சூர்யான்ஷ் ஷெட்கே இறுதிக் கட்டத்தில் அதிரடியாக ஆடி, 8 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 21 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். டெல்லி பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் (2/57) மற்றும் மாதவ் திவாரி (2/40) தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

சவாலான 211 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ், தொடக்கத்தில் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை இழந்தபோதிலும், அபாரமான ரன் சேசிங் மூலம் த்ரில் வெற்றி பெற்றது. 18.6 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்து, தர்மசாலாவில் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச வெற்றிகரமான ரன் சேஸ் என்ற புதிய சாதனையையும் படைத்தது. இந்த வெற்றியால் டெல்லி அணி தங்கள் பிளேஆஃப் வாய்ப்புகளை உயிர்ப்புடன் தக்கவைத்துக் கொண்டது.
டெல்லி அணியின் வெற்றிக்கு டேவிட் மில்லர் முக்கிய பங்களிப்பு செய்தார். அவர் 27 பந்துகளில் 51 ரன்கள் குவித்து தனது 14வது ஐபிஎல் அரை சதத்தைப் பதிவு செய்தார். மில்லரின் இந்த அதிரடி ஆட்டம், பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு பஞ்சாப் பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. எனினும், பென் ட்வார்ஷூயிஸ் பந்துவீச்சில் மில்லர் (51) ஆட்டமிழந்தது போட்டியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் பரபரப்பு மிக அதிகமானது. 16 பந்துகளுக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அசுதோஷ் ஷர்மா ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்து, இலக்கை 8 பந்துகளுக்கு 6 ரன்கள் என குறைத்தார். ஆனால் யஷ் தாக்கூர் வீசிய பந்தில், சப் ஃபீல்டர் பிரவீன் தூபேயின் அற்புதமான கேட்ச்சால் அசுதோஷ் ஷர்மா அவுட்டானார். இதனால் 7 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் டெல்லி 205/7 என தடுமாறியது.
அசுதோஷ் அவுட்டானதும், மாதவ் திவாரி ஏற்கனவே சில முக்கியமான பவுண்டரிகளை அடித்த நிலையில், அஹ்கிப் நபி களமிறங்கினார். ஸ்கோர் சமநிலையிலிருந்தபோது, யஷ் தாக்கூர் வீசிய ஒரு மோசமான 'நோ பால்' பவுண்டரி பஞ்சாப் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அடுத்த பந்திலேயே அஹ்கிப் நபி அதிரடியாக ஒரு சிக்ஸர் அடித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று மிரட்டினார்.
தர்மசாலாவின் உயரமான மைதானமும், இரவு நேர பனிப்பொழிவும் இப்போட்டியில் முக்கிய அம்சங்களாக அமைந்தன. உயரமான பகுதியில் பந்து எளிதாகப் பறப்பதால் பெரிய ஷாட்களை அடிப்பது எளிதாயிற்று. ஆனால் பனிப்பொழிவுள்ள மைதானத்தில் துல்லியமாகப் பந்துவீசுவது கடினம். இதனால் இந்த சீசனில் ஏற்கெனவே தடுமாறிய பஞ்சாப் பந்துவீச்சாளர்களுக்கு அது மேலும் அழுத்தத்தைக் கொடுத்தது. இந்த சூழ்நிலையை டெல்லி கேப்பிடல்ஸ் அணி திறம்படப் பயன்படுத்தி, த்ரில் வெற்றி கண்டது.


Click it and Unblock the Notifications