IPL 2026: “தோல்விக்கு நீங்கதான் காரணம்”.. கேப்டன், கோச் பதவிகளை இழக்கும் அக்சர் படேல் மற்றும் பதானி
டெல்லி: 2026 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து தவிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் மிக அதிரடியான மாற்றங்கள் அரங்கேற உள்ளன. அந்த அணியின் தொடர் தோல்விகள் காரணமாக கேப்டன் அக்சர் படேல் மற்றும் பயிற்சியாளர் குழுவினர் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீசனில் டெல்லி அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 5 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது. கேப்டன் அக்சர் படேலின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. 32 வயதான அவர் 9 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து வெறும் 100 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இதில் ஒரு போட்டியில் அடித்த 56 ரன்களைத் தவிர்த்துப் பார்த்தால், மீதமுள்ள 8 போட்டிகளில் அவர் எடுத்தது வெறும் 44 ரன்கள் தான். பேட்டிங் வரிசையில் முதல் 5 இடங்களுக்குள் களமிறங்கியும் அவர் ரன் குவிக்கத் தவறியது அணிக்கு பெரும் சறுக்கலை ஏற்படுத்தியது.
பந்துவீச்சிலும் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. 12 போட்டிகளில் வெறும் 36 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஓவருக்கு சராசரியாக 8.08 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். ஒரு கேப்டனாக அவர் தன்னை முழுமையாக பந்துவீச்சில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. களத்தில் அவராக எந்த ஒரு முடிவும் எடுக்காமல், பயிற்சியாளர்கள் ஹேமங் பதானி மற்றும் வேணுகோபால் ராவ் ஆகியோரை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருப்பது அவரது கேப்டன்சி குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதுமட்டுமின்றி, அதிரடி வீரர் அபிஷேக் போரலை முழுமையாகப் பயன்படுத்தாதது, ஆல்ரவுண்டர் மாதவ் திவாரிக்கு சரியான வாய்ப்பளிக்காதது போன்ற பல தவறான முடிவுகள் பயிற்சியாளர்கள் மீதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஹேமங் பதானி தலைமையிலான ஒட்டுமொத்த பயிற்சி குழுவையும் கூண்டோடு கலைக்க டெல்லி நிர்வாகம் தீவிரமாக முடிவு செய்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ஜேஎஸ்டபுள்யூ மற்றும் ஜிஎம்ஆர் (JSW and GMR) ஆகிய இரு நிறுவனங்கள் சுழற்சி முறையில் நிர்வகித்து வருகின்றன. அடுத்த சீசன் முதல் அணி நிர்வாகத்தின் முழு கட்டுப்பாடும் பார்த் ஜிண்டால் தலைமையிலான ஜேஎஸ்டபுள்யூ வசம் செல்ல உள்ளது. இதனால் 2027 ஆண்டு நடைபெற உள்ள மெகா ஏலத்திற்கு முன்பாகவே அணியில் இந்த அதிரடி மாற்றம் நடைபெறும் எனத் தெரிகிறது. அக்சர் படேல் ஒரு சாதாரண வீரராக அணியில் தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளதே தவிர, இனி அவருக்கு கேப்டன் பதவி கிடைக்காது என்றே உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications
