சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனி காயம் காரணமாக இரண்டு வாரத்திற்கு பங்கேற்க மாட்டார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் சிஎஸ்கே அணி பெரும் பின்னடைவை சந்தித்து இருப்பதாக ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தோனி தற்போது காயம் காரணமாக விலகி இருப்பது சிஎஸ்கேவுக்கு நல்லதா கெட்டதா என்பதை தற்போது பார்க்கலாம். தோனி கடந்த ஆறு ஆண்டுகளாகவே சிஎஸ்கே அணிக்காக சரியாக விளையாடவில்லை. இன்னும் சொல்லப்போனால் தோனி கடைசியாக விளையாடிய 6 சீசன்களில் ஒரு முறை கூட 200 பந்துகளை எதிர்கொண்டது கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் இந்த ஆறு சீசன்களில் தோனி வெறும் இரண்டு முறை தான் 200 ரன்களை தொட்டு இருக்கிறார். இந்த சூழலில் மாறிவரும் டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ப தோனியால் அதிரடி காட்டுவது என்பது முடியாத காரியம். மேலும் அவருக்கு 44 வயதாகி இருப்பதால், களத்தில் பெரியதாக சோபிக்க முடியாது.
இந்த நிலையில் தோனிக்கு மாற்றாக ஏற்கனவே அணியில் சஞ்சு சாம்சன் இருக்கின்றார். இதனால் அவர் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வார். ஒருவேளை இம்பேக்ட் வீரர் தேவைப்படும் பட்சத்தில் சிஎஸ்கே அணி அதிரடி வீரர் உர்வில் பட்டேலை களம் இறக்கும் சையது முஸ்தாக் அலி தொடரில் அவர் 28 பந்துகளில் சதம் அடித்து இந்திய அளவில் சாதனை படைத்திருக்கின்றார்.
இதேபோன்று விஜய் ஹசாரே கோப்பையிலும் அவர் 41 பந்துகளில் சதம் அடித்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக கடந்த சீசனில் வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் 68 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 212 என்ற அளவில் இருந்தது. இதனால் தோனி களமிறங்காத பட்சத்தில் சிஎஸ்கே அணி உர்வில் பட்டேலை இம்பேக்ட் வீரராக களம் இறக்கலாம்.

இல்லையெனில் நம்பர் மூன்றாவது வீரராக விளையாட வைக்கலாம். தோனி களத்தில் இருந்தால் அவருடைய அனுபவம் நிச்சயம் கை கொடுக்கும். இது மட்டும்தான் சிஎஸ்கே அணிக்கு மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த சில சீசன்களாக தோனி களத்தில் பெரிய அளவு முடிவுகளில் எடுப்பதில் ஈடுபாடு காட்டவில்லை. புதிய கேப்டன்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் கொஞ்சம் வழி விட்டிருந்தார். இதனால் தோனி இல்லாதது சிஎஸ்கே அணிக்கு மைனஸ் ஆக இருக்காது என்பது தான் கிரிக்கெட் ஆர்வலர்களின் பதிலாக இருக்கிறது.