IPL 2026: சிஎஸ்கே அணிக்கு இரட்டை அடி.. ஒட்டுமொத்த வீரர்களுக்கும் தண்டனை கொடுத்த பிசிசிஐ.. என்ன தவறு?
அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்து ஐபிஎல் 2026 தொடரிலிருந்து வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, தற்போது பிசிசிஐ மற்றொரு பலத்த அடியைக் கொடுத்துள்ளது. இந்தப் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 66-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதுவே சிஎஸ்கே அணிக்கு இந்த ஆண்டு கடைசி லீக் போட்டி ஆகும். இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை. ஐபிஎல் ஒழுங்குமுறை விதிகளின்படி, இது ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி இந்தச் சீசனில் செய்யும் 2-வது தவறு என்பதால், அபராதத் தொகை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 18-வது லீக் ஆட்டத்திலும் சிஎஸ்கே அணி இதே போன்ற தவறைச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் ருதுராஜுக்கு மட்டும் 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அணியில் விளையாடிய மற்ற 11 வீரர்களுக்கும் (இம்பாக்ட் பிளேயர் உட்பட) பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. இதன்படி, மற்ற வீரர்களுக்குத் தலா 6 லட்சம் ரூபாய் அல்லது அவர்களின் ஒரு போட்டிக்கான ஊதியத்தில் 25 சதவீதம் (எது குறைவோ அது) அபராதமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான போட்டியில் தோற்று தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், கேப்டன் மற்றும் வீரர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த ஒழுங்கு நடவடிக்கை சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.
பிளே-ஆப் கனவு தகர்ந்தது
நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி 229 ரன்கள் குவித்தது. அதனைத் துரத்திய சிஎஸ்கே அணி 140 ரன்களுக்குச் சுருண்டு 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் படுதோல்வியால் சிஎஸ்கே அணியின் பிளே-ஆப் கனவு அதிகாரப்பூர்வமாகத் தகர்ந்தது. தொடரிலிருந்து வெளியேறிய ஏமாற்றத்தில் இருந்த சிஎஸ்கே அணிக்கு, இந்த அபராத நடவடிக்கை 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது' போல அமைந்துள்ளது.
அடுத்தடுத்த சீசன்களில் பந்துவீச்சு வேகத்தை (Over-rate) முறைப்படுத்துவதில் சிஎஸ்கே அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ருதுராஜ் தலைமையிலான இளம்படை இந்த சீசனில் பல சவால்களைச் சந்தித்த போதிலும், இறுதியில் தோல்வியுடன் வெளியேறியது சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமே.


Click it and Unblock the Notifications
