மும்பை: 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. "ஷாருக்கான் தனது சொந்த நன்மைக்காக அந்த வீரரை உடனடியாக அணியிலிருந்து நீக்க வேண்டும்" என்று அரசியல் கட்சிகள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முஸ்தஃபிசுர் ரஹ்மானை, ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுமார் ரூ. 9.20 கோடி கொடுத்து வாங்கியது. ஆனால், அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சூழலில், வங்கதேச வீரருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அணியில் சேர்ப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திடம் பேசிய சிவ சேனா தலைவர் சஞ்சய் நிருபம், ஷாருக்கானுக்கு எச்சரிக்கை கலந்த அறிவுரையை வழங்கியுள்ளார். "தற்போது ஒட்டுமொத்த இந்தியாவும் வங்கதேசத்தின் மீது கடும் கோபத்தில் உள்ளது. இந்தச் சூழலில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு வைத்திருக்கும் எவரும் மக்களின் கோபத்திற்கு இலக்காக நேரிடும்.
ஷாருக்கான் ஒரு பெரிய இலக்காக மாறுவதற்கு முன்பாகவே, அந்த வங்கதேச வீரரை அணியிலிருந்து நீக்கிவிடுவது நல்லது. இது ஷாருக்கானின் தனிப்பட்ட நன்மைக்கும், இந்தியாவின் நலனுக்கும் உகந்தது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு புறம், உத்தவ் தாக்கரே தரப்புச் சிவ சேனா (UBT) செய்தித் தொடர்பாளர் ஆனந்த் துபே இன்னும் காட்டமாக விமர்சித்துள்ளார். "பாகிஸ்தான் வீரர்களைப் போலவே வங்கதேச வீரர்களையும் இந்திய மண்ணில் ஐபிஎல் விளையாடத் தடை விதிக்க வேண்டும். நம்முடைய இந்து சகோதர, சகோதரிகள் கொல்லப்படுவதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது.
ஷாருக்கான் உடனடியாக முஸ்தஃபிசுரை அணியிலிருந்து நீக்க வேண்டும். இவ்வளவு எதிர்ப்புகளுக்குப் பிறகும் அவர் அதைச் செய்யவில்லை என்றால், இந்த நாட்டில் வாழ்ந்து, இங்கே சம்பாதிக்கும் அவருக்கு இந்திய மக்களின் உணர்வுகள் புரியவில்லை என்றே அர்த்தம்" என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.
ஏற்கனவே உஜ்ஜயினியைச் சேர்ந்த சில அமைப்புகள், வங்கதேச வீரர் விளையாடினால் ஆடுகளத்தைச் சேதப்படுத்துவோம் என்று மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தற்போது அரசியல் ரீதியாகவும் ஷாருக்கானுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் என்ன முடிவெடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.