மும்பை: தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனான டுபிளசிஸ் 14 ஆண்டுகால பயணத்திற்குப் பிறகு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஐபிஎல் தொடரில் கடந்த 14 சீசன்களாக நான் விளையாடி வருகிறேன்.
இந்த நிலையில் வரும் ஐபிஎல் ஏலத்தில் என்னுடைய பெயரை நான் பதிவு செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கின்றேன். இது நான் எடுத்த மிகப்பெரிய முடிவு. நான் இந்த பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது எனக்கு வெறும் நன்றி உணர்வு மட்டும்தான் இருக்கின்றது.

என்னுடைய வாழ்க்கையில் இந்தத் தொடர் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் நான் விளையாடியதை அதிர்ஷ்டம் என்றே நினைக்கின்றேன். பல நல்ல அணிகளுடனும், வேட்கை நிறைந்த ரசிகர்கள் முன் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா எனக்கு பல நல்ல நட்புகளையும், பாடங்களையும், நல்ல நினைவுகளையும் கொடுத்திருக்கிறது.
அதுதான் என்னை ஒரு நல்ல மனிதனாகவும், நல்ல கிரிக்கெட் ஆகவும் மாற்றி இருக்கின்றது. இந்த 14 ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்த பயிற்சியாளர்கள் அணி நிர்வாகிகள் சக வீரர்கள் எனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். 14 ஆண்டு காலம் என்பது மிகவும் நீண்ட காலம்.
இந்த ஐபிஎல் அத்தியாயத்தை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன். இந்தியா எப்போதுமே என்னுடைய இதயத்தில் ஒரு ஸ்பெஷலான இடத்தில் இருக்கின்றது. இது நிச்சயம் குட் பாய் கிடையாது. நாம் மீண்டும் சந்திப்போம். அதே சமயம் இந்த ஆண்டு நான் புது சவாலை எதிர் நோக்க விரும்புகிறேன்.
நான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பிஎஸ்எல் தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கின்றேன். புது நாடு, புதுசூழல் புதுசவால் ஆகியவற்றை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றேன். பாகிஸ்தானின் விருந்தோம்பலை எதிர்கொள்ள ஆவலாக இருக்கின்றேன் என்று டுபிளசிஸ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் டுபிளசிஸின் இந்த ஓய்வு முடிவை அடுத்து சிஎஸ்கே அணி அவர் தொடர்பான ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட டுபிளசிஸ், என்னுடைய வாழ்க்கையின் சிறந்த 10 ஆண்டுகள் சிஎஸ்கே அணியில் தான் இருந்தது. அனைத்து நினைவுகளுக்கும் நன்றி. நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் என்னுடைய பயணத்தை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன் என்று கூறியுள்ளார்.