IPL Final: வாஷிங்டன் சுந்தர் மட்டும் இல்லைனா.. ஆர்சிபி-க்கு எதிராக குஜராத்தை தனி ஆளாக சுமந்த தமிழன்!
அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துல்லியமான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் குஜராத் டைட்டன்ஸ் அணி திணறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் தனி ஆளாக போராடி குஜராத் அணியை கவுரவமான ஸ்கோர் எடுக்கச் செய்தார்.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இந்த சீசன் முழுவதும் அதிரடியாக விளையாடிய கேப்டன் சுப்மன் கில் 10 ரன்களிலும், சாய் சுதர்சன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினர். பவர் பிளே ஓவர்களில் குஜராத் அணி 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

அதன்பின் வந்த நிஷாந்த் சிந்து 20 ரன்களும், நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பெங்களூரு அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் குஜராத் வீரர்களால் பெரிய அளவில் சிக்ஸர்களை விளாச முடியவில்லை. 12.1 ஓவர்களில் 73 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி இக்கட்டான நிலையில் இருந்தது. ராகுல் திவேதியா 7 ரன்களிலும், ஜேசன் ஹோல்டர் 7 ரன்களிலும் வெளியேறினர்.
வாஷிங்டன் சுந்தர் தனி ஒருவன்
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 37 பந்துகளில் 50 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 5 பவுண்டரிகள் அடங்கும். இறுதி நேரத்தில் அர்ஷத் கான் 6 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 15 ரன்கள் சேர்த்து ஸ்கோர் உயர உதவினார். ரஷித் கான் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 155 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு அணி தரப்பில் இளம் வீரர் ரசிக் சலாம் மிகச் சிறப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அனுபவ வீரர் புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜாஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், குருணால் பாண்டியா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். குறிப்பாக குருணால் பாண்டியா 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து குஜராத் வீரர்களைக் கட்டுப்படுத்தினார். அடுத்து பெங்களூரு அணி கோப்பையை தக்கவைக்க 120 பந்துகளில் 156 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
