IPL 2026: 700 ரன்கள் மேல் அடித்து என்ன யூஸ்.. பைனலில் காலை வாரிய சாய் சுதர்சன்.. குஜராத் அம்பேல்
அகமதாபாத்: ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக களம் இறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆரம்பமே பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. குஜராத் அணியின் நம்பிக்கை நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளனர்.
போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆர்சிபி அணியின் பந்துவீச்சை எதிர்கொண்ட சாய் சுதர்சன், 12 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். முதல் ஓவரிலேயே டிஆர்எஸ் (DRS) மூலம் ஒருமுறை விக்கெட் கண்டத்திலிருந்து தப்பிய சாய் சுதர்சன், ஆர்சிபியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள திணறி தனது விக்கெட்டை இழந்தார்.

முன்னதாக கேப்டன் சுப்மன் கில்லும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சாய் சுதர்சனும் உடனே அவுட்டானது குஜராத் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் 2026 சீசன் முழுவதும் சாய் சுதர்சன் அபாரமான ஃபார்மில் இருந்தார். அவர் இந்த சீசனில் விளையாடிய 16 போட்டிகளில் 710 ரன்கள் குவித்து (1 சதம் மற்றும் 8 அரைசதங்களுடன்) அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
குஜராத் அணியின் தூண்களாக விளங்கும் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே 11 முறை சத பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி என்ற உலக சாதனையை படைத்துள்ளனர். குறிப்பாக, குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக இந்த ஜோடி அமைத்த 167 ரன்கள் தொடக்க பார்ட்னர்ஷிப் தான் குஜராத் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்தது.
ஆனால், இந்த முக்கிய பைனல் போட்டியில் ஆர்சிபி இவர்களின் பார்ட்னர்ஷிப்பை ஆரம்பத்திலேயே உடைத்து போட்டியை தன்வசப்படுத்தியுள்ளது. முக்கியமான பைனலில் இந்த ஜோடி காலை வாரி இருப்பது, அந்த அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் ஆர்சிபி கோப்பை மீது ஒரு கையை இப்போதே வைத்துவிட்டதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications

