IPL 2026: ஆர்சிபி கோப்பையை வென்றதற்கு காரணம்.. இடையில் எங்களுக்கு ஒரு சிக்கல் வந்தது- விராட் கோலி
அகமதாபாத்: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதில் ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் விராட் கோலி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார்.
இதில் மூன்று சிக்சர்களும், ஒன்பது பவுண்டரிகளும் அடங்கும். விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 178 என்ற அளவில் இருந்தது. இதன் காரணமாக விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். போட்டி முடிவடைந்த பிறகு பேசிய விராட் கோலி, நான் இந்த தொடர் ஆரம்பத்திலே கூறியது இது மட்டும்தான்.

கடந்த முறை போல் நமக்கு எந்த அழுத்தமும் இம்முறை இல்லை. நமது அணியின் திறமை குறித்து நமக்கு நன்றாக தெரியும். எனவே நமது திட்டங்களை சரியாக தீட்டி அதை களத்தில் நடைமுறைப்படுத்தினால் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். ஏனென்றால் இந்த தொடரில் சிறந்த அணியாக நாம் தான் இருக்கின்றோம் என்று நான் கூறினேன்.
லீக் சுற்றில் நாம் இவ்வளவு சிறப்பாக செயல்பட்டோம் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. லீக் முடிவிலும் நாம் முதலிடம் பிடித்திருந்தோம். எங்கள் அணியில் வீரர்கள் இடையே பலதரப்பட்ட திறமை இருக்கின்றது. அனுபவம் இருக்கின்றது, எங்கள் அணியில் உள்ள வீரர்கள் மீண்டும் ஒருமுறை ஜொலித்ததை அனைவரும் பார்த்திருப்பார்கள்.
உண்மையிலேயே இது சிறந்த ஒரு செயல்பாடு தான். லீக் சுற்றில் எங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தது. அதன் பிறகு மீண்டும் நாங்கள் விளையாடிய போது தோல்வியை தழுவினோம். அதன் பிறகு மும்பைக்கு எதிராக ஒரு நெருக்கமான வெற்றியைப் பெற்றோம். அந்த வாரம் உண்மையிலேயே ஒரு கடுமையான வாரமாக தான் இருந்தது.
ஏனென்றால் நாங்கள் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் நிலையில் இருந்த போது அந்த ஓய்வு கிடைத்தது. ஆனால் மும்பைக்கு எதிராக நாங்கள் பெற்ற வெற்றி எங்களுடைய நம்பிக்கையை மீண்டும் அதிகமாக்கியது. இதைப் போன்று கொல்கத்தாவுக்கு எதிராக நாங்கள் சிறந்த வெற்றியை பெற்றோம். இதன் மூலம் புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றோம்.
இந்த கோப்பைக்காக நாங்கள் பல ஆண்டுகள் காத்திருந்தோம். இந்த அணியில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அனைத்து போட்டிகளிலும் ஒருவரை வெற்றிக்காக போராட வேண்டும் என்று நிலை கிடையாது. நமக்கு பின்னால் இருப்பவரும் சிறப்பாக விளையாடுவார் என்று நம்பிக்கை இருந்தது. இந்த வீரர்கள் அனைவரும் உங்கள் அணிக்காக போட்டியை வென்று தருவார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும்.
இந்த தொடரில் பல ஆட்டநாயகன் விருதை பல வீரர்கள் வென்று இருந்தார்கள். பந்து வீச்சிலும் எங்கள் அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தார்கள். ஹேசல்வுட், புவனேஸ்வர் குமார், குர்னல் பாண்டியா போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். இதேபோன்று ராசிக் தாரும் இந்த தொடரில் அபாரமாக பந்து வீசினார்.
பேட்ஸ்மேன்களும் ஆட்டத்திற்குள் வந்து முக்கிய பங்களிப்பை அளித்தார்கள். எனவே இந்த அணியை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கின்றேன். எங்கள் அணியில் பலம் இருக்கின்றது. அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். அதனால் தான் எங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருக்கின்றது என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

