லாகூர்: பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரால் எந்த வகையிலும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருடன் போட்டி போட முடியாது என்பது கிரிக்கெட் வட்டாரத்தில் அனைவரும் அறிந்ததே. வருமானம், பிரம்மாண்ட கட்டமைப்பு மற்றும் முன்னணி வீரர்களின் பங்கேற்பு என அனைத்திலும் ஐபிஎல் தொடரே உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்காத சில வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே பாகிஸ்தான் லீக்கில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் பல முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால், பாகிஸ்தான் தொடரில் விளையாடும் வீரர்களை ஐபிஎல் அணிகள் ஒப்பந்தம் செய்யும் நிகழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டு பெஷாவர் சல்மி அணிக்காக விளையாடவிருந்த தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் கார்பின் போஷ், மும்பை இந்தியன்ஸ் அணியின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் தொடரைப் புறக்கணித்தார். அதேபோல், இந்த ஆண்டு இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் இடம்பெற்றிருந்த ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசரபானி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்துள்ளார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், மேலும் சில முன்னணி வீரர்களும் இதே பாணியைப் பின்பற்றி இந்தியா வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை அணியின் நாதன் எல்லிஸ், ராஜஸ்தான் அணியின் சாம் கரன் மற்றும் கொல்கத்தா அணியின் ஹர்ஷித் ராணா ஆகியோர் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளனர். ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ், நுவான் துஷாரா மற்றும் மதீஷா பதிரானா ஆகியோரின் பங்கேற்பிலும் இன்னும் தெளிவற்ற நிலை நீடிக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்களின் இந்தத் தட்டுப்பாட்டைப் போக்க, பாகிஸ்தான் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியாவின் ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஒட்னீல் பார்ட்மேன் ஆகியோரை ஐபிஎல் அணிகள் குறிவைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
இவர்கள் மட்டுமின்றி, இஸ்லாமாபாத் அணியின் ரிச்சர்ட் க்ளீசன், ஷமர் ஜோசப், குவெட்டா அணியின் அல்ஜாரி ஜோசப் மற்றும் ஹைதராபாத் ஹூஸ்டன் அணியின் ரிலே மெரிடித் ஆகியோரையும் ஐபிஎல் அணிகள் மாற்று வீரர்களாக ஒப்பந்தம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. முல்தான் அணியில் உள்ள 41 வயதான பீட்டர் சிடில் இன்றும் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் அபார திறமை கொண்டுள்ளார். எனவே, ஐபிஎல் அணி நிர்வாகங்கள் தங்களது தேவையைப் பொறுத்து விரைவில் இந்த வீரர்களைத் தொடர்புகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் அணிகளின் இந்த நகர்வு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மேலும் பெரிய தலைவலியை உருவாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த நிலையை தவிர்ப்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஒப்பந்தத்தை மீறி ஐபிஎல் தொடருக்கு செல்லும் வெளிநாட்டு வீரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கிரிக்கெட் வீரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தால் எதிர்காலத்தில் எந்த முன்னணி வீரரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாட முன்வர மாட்டார்கள் என்ற அபாயமும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு உள்ளது.
