மும்பை: கம்பீர் விளையாடும் காலத்தில் இருந்து, தற்போது வரை எதிரணிக்கு வில்லனாகேவே இருந்துள்ளார் என்று ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டுபிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார். கம்பீர் தனது தீவிரப் போட்டி மனப்பான்மையால் அவரை ஒரு மதிக்கப்படும் தலைவராக்கியுள்ளதாக டு பிளெஸ்ஸிஸ் குறிப்பிட்டார்.
ஜியோசினிமாவிற்கு அளித்த பேட்டியில் டு பிளெஸ்ஸிஸ், “கம்பீருடன் விளையாடுபவர்களுக்கும், எதிரணியில் இருந்து அவரைப் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. எதிரிக்கு அவர் எப்போதும் வில்லன் போல் தெரிவார், ஆனால் நீங்கள் அதை மதிக்க வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

கம்பீரின் தலைமைப் பண்புகளை விவரித்த டு பிளெஸ்ஸிஸ், “அவர்தான் கௌதம் கம்பீர். அவர் மிகவும் போட்டித்தன்மை கொண்டவர். யாராலும் விரும்பப்பட வேண்டும் என்று ஒரு நொடிகூட அவர் கவலைப்பட மாட்டார். வீரர்களிடம் தரங்களை நிர்ணயிப்பதும், உடை மாற்றும் அறையில் வீரர்களுக்கான பொறுப்புகளை உறுதிப்படுத்துவதும்தான் ஒரு தலைவராக அவரது பணி,” என்றார்.

கம்பீர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு ஐபிஎல் பட்டங்களை பெற்றுத்தந்து, தனது தலைமைத்துவத் திறனை நிரூபித்தார். “அவரது சாதனையைப் பார்த்தால் நீங்கள் வியக்க மட்டுமே முடியும். தலைமைத்துவக் கண்ணோட்டத்தில், கம்பீர் இருந்தவரை கேகேஆர் ஒரு பலமான அணியாகத் திகழ்ந்தது,” என டு பிளெஸ்ஸிஸ் பாராட்டினார்.
கம்பீர் விலகிய பின், கேகேஆர் அணி அதன் தனித்துவத்தை இழந்து கடினமான காலகட்டத்தை சந்தித்தது. 2024 ஆம் ஆண்டில் ஒரு வழிகாட்டியாக அவர் மீண்டும் அணிக்குத் திரும்பியதும், ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான ஒரு சீசனை எட்டத் தேவையான ஊக்கத்தை அளித்து, அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார்.
மீண்டும் வந்த கம்பீர், தனது பழைய தீவிர குணம் வெளிப்பட, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் 'மனப்பான்மை’ தனக்குப் பிடிக்கவில்லை என்றும், கனவிலும் அவர்களைத் தோற்கடிக்க விரும்புவதாகவும் வெளிப்படுத்தினார். “எதையும் வெல்லாதவர்கள், ஆனால் அனைத்தையும் வென்றதாக நினைத்துக் கொண்டார்கள்,” என்று கம்பீர் ஆர்சிபி குறித்து விமர்சித்தார்.
அப்போதைய ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு, “வெளியில் இருந்து பார்க்கும்போது, அவரைப் போன்ற ஒரு தலைவரை எதிரணியில் கண்டு நாம் தோற்கடிக்க விரும்புவோம். ஆனால் அவர் அமைக்கும் தரங்களை மதிக்காமல் இருக்க முடியாது,” என்றார்.

“தலைமைத்துவத்தைப் பார்க்கும்போது மக்கள் கேப்டனையே நினைக்கிறார்கள். கேப்டனுக்குப் பங்குண்டு, ஆனால் உரிமையாளர்கள், பயிற்சியாளர், அணியின் தலைமைப் குழு அனைத்திலும் இது பரவியுள்ளது. வலுவான கேப்டன் இல்லையென்றால், அங்கே ஒரு வலுவான பயிற்சியாளர் தலையிட வேண்டும்,” என அவர் விளக்கினார்.