பெங்களூரு: "சொந்த ஊர்ல மேட்ச் நடக்குமா, நடக்காதா?" என்று பல மாதங்களாகத் தவித்துக் கொண்டிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ரசிகர்களுக்கு, தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஐபிஎல் 2026 தொடரின் போட்டிகளை வரலாற்றுச் சிறப்புமிக்க எம். சின்னசாமி மைதானத்திலேயே நடத்தக் கர்நாடக அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ஒரு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கொண்டாட்ட நிகழ்ச்சி கூட்ட நெரிசல் சம்பவத்தால் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த மைதானத்தில் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. தற்போது அதற்குக் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இது குறித்து KSCA வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், "கர்நாடக அரசின் உள்துறை அமைச்சகம், சின்னசாமி மைதானத்தில் சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி அளித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்தாலும், அரசு சில கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. மைதானத்தில் ரசிகர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்ய வேண்டும். இது குறித்து கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் கூறுகையில், "அரசு விதித்துள்ள நிபந்தனைகளை முழுமையாகப் பின்பற்ற நாங்கள் தயாராக உள்ளோம். பாதுகாப்பு தொடர்பான விரிவான செயல்திட்டத்தை நிபுணர் குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம்" என்று உறுதியளித்துள்ளது.
ஆர்சிபி ரசிகர்களால் மறக்க முடியாத மற்றும் மறக்க விரும்பாத ஒரு நாள் கடந்த ஆண்டு ஜூன் 4. 2025 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தனது முதல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றியைக் கொண்டாடச் சின்னசாமி மைதானத்தில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணியின் போது, எதிர்பாராத விதமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே, முக்கிய போட்டிகளை நடத்த இந்த மைதானத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
நடப்புச் சாம்பியனான ஆர்சிபி அணி, தனது சொந்த மைதானத்தில் விளையாட முடியாது என்று சொல்லப்பட்டதால், போட்டிகள் ராய்ப்பூர் அல்லது புனேவுக்கு மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. இதனிடையே சின்னசாமி மைதான பாதுகாப்பிற்காக 350 செயற்கை நுண்ணறிவு கேமராக்களைப் பொருத்த ஆர்சிபி 4.5 கோடி ரூபாய் செலவு செய்ய முன்வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அனுமதி கிடைத்துவிட்டதால், விராட் கோலி மற்றும் ஆர்சிபி படை மீண்டும் சின்னசாமி மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிவதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆர்சிபி நிர்வாகம் விரைவில் வெளியிடும் என கூறப்படுகிறது.