IPL 2026: யாரு சாமி நீ? மைதானத்தையே வாயடைக்க வைத்த குஜராத் பவுலர் அசோக்.. மிரண்டு போன பவல்
அகமதாபாத்: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில், 23 வயதே ஆன இளம் வேகப்பந்து வீச்சாளர் அசோக் சர்மா வீசிய ஒரு பந்து ஒட்டுமொத்த மைதானத்தையும் வாயடைக்கச் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ரோவ்மன் பவலை அவர் வீழ்த்திய விதம், தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 25-வது லீக் போட்டியில், கொல்கத்தா அணி பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 11-வது ஓவரை அசோக் சர்மா வீசினார். அந்த ஓவரின் ஒரு பந்தை 146 கிமீ வேகத்தில் மிக வேகமாக வீசிய அவர், அடுத்த பந்திலேயே தனது வித்தையைக் காட்டினார். கையின் பின்புறத்தைப் பயன்படுத்தி அவர் வீசிய அந்த ஸ்லோயர் பந்து வெறும் 107.7 கிமீ வேகத்தில் மட்டுமே வந்தது. முந்தைய பந்தை விட 39 கிமீ வேகம் குறைவாக வந்ததைச் சற்றும் எதிர்பார்க்காத ரோவ்மன் பவல், பந்தை வானத்தை நோக்கி அடிக்க, அதனை முகமது சிராஜ் லாவகமாகப் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார்.

வர்ணனையாளர் பாராட்டு
அசோக் சர்மாவின் இந்தத் திறமையைக் கண்டு வர்ணனையாளர் இயன் பிஷப் வியந்து போனார். "இந்த இளம் வீரரின் விசேஷமான திறமையை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை" என்று அவர் பாராட்டித் தள்ளினார். 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அதிரடி காட்டத் தொடங்கிய பவல் ஆட்டமிழந்தது, கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அந்த அணி 87 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டது.
யார் இந்த அசோக் சர்மா?
ராஜஸ்தானைச் சேர்ந்த அசோக் சர்மாவை கடந்த 2026 ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 90 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. ஏற்கனவே இந்த சீசனில் 154.2 கிமீ வேகத்தில் பந்துவீசி, 2026 ஐபிஎல் தொடரின் அதிவேகப் பந்து என்ற சாதனையைத் தன்வசம் வைத்துள்ள அவர், இப்போது வேகத்தைக் குறைத்தும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்பதை நிரூபித்துள்ளார். ரபாடா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு மத்தியில் அசோக் சர்மாவின் இந்த வளர்ச்சி குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான இந்த ஆடுகளத்தில் அசோக் சர்மாவின் இந்தத் திட்டம் மிகச்சரியாகப் பலன் அளித்தது. கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்த போதிலும், குஜராத் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அசோக் சர்மாவின் இந்த '39 கிமீ டிராப்' பந்துவீச்சு, இந்த சீசனின் மிகச்சிறந்த பந்துகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய நுணுக்கமான பந்துவீச்சு முறைகள் இளம் வீரர்களிடம் வெளிப்படுவது இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்குச் சாதகமான ஒன்றாகக் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications