IPL 2026: 100 ரன்களுக்குள் சுருள வேண்டிய பஞ்சாப் அணியை தூக்கி நிறுத்திய சூர்யான்ஷ்.. கோட்டை விட்ட GT
அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டத்தில் அகமதாபாத் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த குஜராத் அணியின் திட்டம் ஆரம்பத்தில் மிகச்சிறப்பாக வேலை செய்தது. ஒரு கட்டத்தில் 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து, 100 ரன்களைக் கூடத் தாண்டாது என்று பரிதாப நிலையில் இருந்த பஞ்சாப் அணியை, இளம் வீரர் சூர்யான்ஷ் ஷெட்கே தனது அதிரடி ஆட்டத்தால் மீட்டார்.
ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே முகமது சிராஜ் பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கோனலி ஆகியோரை முதல் ஓவரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளிலேயே வீழ்த்தி 2 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளைப் பறித்தார் சிராஜ். இந்த ஆரம்பகட்ட அதிர்ச்சியிலிருந்து பஞ்சாப் அணி மீள்வதற்குள், ஜேசன் ஹோல்டர் தனது பங்கிற்கு விக்கெட்டுகளைச் சரித்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்களிலும், நேஹல் வதேரா ரன் ஏதும் எடுக்காமலும் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதிரடி வீரர் பிரப்சிம்ரன் சிங் 15 ரன்களில் ரபாடாவிடம் வீழ்ந்தார். இதனால் 8.4 ஓவர்களில் 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி நிலைகுலைந்தது.

இந்த இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த சூர்யான்ஷ் ஷெட்கே மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் பொறுப்புடன் ஆடினர். குறிப்பாக சூர்யான்ஷ் ஷெட்கே மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு குஜராத் பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். வெறும் 29 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 5 பிரம்மாண்ட சிக்ஸர்களுடன் 57 ரன்கள் குவித்து அசத்தினார். ஸ்டோய்னிஸ் அவருக்கு உறுதுணையாக ஆடி 31 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டிற்கு 44 பந்துகளில் 79 ரன்களைச் சேர்த்து அணியைச் சரிவிலிருந்து மீட்டது.
இறுதி ஓவர்களில் மார்கோ ஜான்சன் 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஸ்கோரை 160 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றார். குஜராத் தரப்பில் ஜேசன் ஹோல்டர் அபாரமாகப் பந்துவீசி 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ் மற்றும் ரபாடா தலா 2 விக்கெட்டுகளைப் பெற்றனர். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணியை மிகக் குறைந்த ரன்களில் சுருட்டும் வாய்ப்பு இருந்தும், மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தத் தவறியதால் குஜராத் அணி அந்த வாய்ப்பைக் கோட்டை விட்டது. இறுதியில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி அடுத்துக் களம் இறங்கியது.


Click it and Unblock the Notifications