IPL 2026: மணிக்கு 154.2 கிமீ. வேகத்தில் பந்துவீசிய குஜராத் வீரர்.. யார் இந்த அசோக் சர்மா?
அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் சர்மா, ஐபிஎல் 2026 சீசனின் அதிவேக பந்தை வீசி சாதனை படைத்துள்ளார். அகமதாபாத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், அவர் மணிக்கு 154.2 கி.மீ வேகத்தில் பந்துவீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இந்த அதிவேகப் பந்து இந்த சீசனில் வீசப்பட்ட இரண்டாவது 150 கி.மீ வேகப்பந்து ஆகும். ஏற்கனவே லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆன்ரிக் நார்ட்ஜே 150.9 கி.மீ வேகத்தில் பந்துவீசியிருந்தார். அசோக் சர்மா வீசிய அந்த பந்து, 16வது ஓவரின் கடைசிப் பந்தாக இருந்தது. அது பேட்ஸ்மேன் துருவ் ஜூரலின் பிளாக்ஹோலுக்குள் துல்லியமாக வீசப்பட்டு, அவரை தடுமாறச் செய்தது.

எனினும், ஐபிஎல் வரலாற்றின் அதிவேகப் பந்து வீச்சு சாதனையை ஷான் டைட் (157.71 கி.மீ) தன்வசம் வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக லாக்கி பெர்குசன் (157.30 கி.மீ), உம்ரான் மாலிக் (157 கி.மீ), மயங்க் யாதவ் (156.70 கி.மீ) மற்றும் நார்ட்ஜே (156.22 கி.மீ) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
கிரிக்கெட்டில் பந்துவீசும் வேகம், காவல்துறையினர் வாகன வேகத்தை அளவிடப் பயன்படுத்தும் 'ரேடார் கன்' கருவி மூலம் கண்டறியப்படுகிறது. பிட்ச்சின் இருமுனைகளிலும் உள்ள சைட் ஸ்கிரீன்களுக்குப் பின்னால் இவை பொருத்தப்படுகின்றன. இந்த கருவிகள் ரேடியோ அலைகளை பந்தின் மீது பாய்ச்சுகின்றன.
திரும்பி வரும் அலைகளின் அதிர்வெண் மாற்றத்தைக் கணக்கிட்டு, பந்தின் துல்லியமான வேகம் நிர்ணயிக்கப்படுகிறது. பந்து வீச்சாளரின் கையை விட்டு கிளம்பும் தருணத்திலேயே இது அளவிடப்படுகிறது, ஏனெனில் அப்போதே அதன் வேகம் உச்சத்தில் இருக்கும்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அசோக் சர்மாவின் இந்த செயல்பாடு, இந்திய வேகப்பந்துவீச்சுக்கு ஒரு சிறப்பான விசயமாக பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு வீரர்களுக்கு இணையாக இந்திய பந்துவீச்சாளர்களும் அதிவேகத்தில் ஜொலிக்க முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. உம்ரான் மாலிக், மயங்க் யாதவ் போன்றோர் காயங்களால் அவதிப்பட்ட நிலையில், அசோக் சர்மா தடகள வீரரைப் போல் சீராகப் பந்துவீசும் இயல்பான பாணியைக் கொண்டுள்ளார்.
அவரது பந்துவீச்சில் மாறுபாடுகளை மேம்படுத்த சில முயற்சிகள் தேவைப்படலாம். இருப்பினும், பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறுவது போல, "வேகமான பந்துவீச்சுக்கு ஈடாக வேறு எதுவும் இல்லை" என்பது நிதர்சனமாகும், இதனால் அசோக் மீது கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் திரும்பி உள்ளது.


Click it and Unblock the Notifications