மும்பை: ஐபிஎல் 2026 சீசனுக்கான வீரர்களுக்கான விதிமுறைகளை பிசிசிஐ கடுமையாக்கியுள்ளது. பயிற்சி மற்றும் போட்டி நாளுக்கான நடத்தைகள் குறித்து புதிய வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இப்புதிய விதிமுறைகள் அனைத்தும் அணி மேலாளர்களுடனும் சமீபத்தில் பகிரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.,
இந்த விதிமுறை மாற்றங்களில் மிக முக்கியமானது, போட்டி நாட்களில் பயிற்சிக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடுகளத்தின் தன்மையைப் பாதுகாக்கவும், போட்டி அட்டவணையை சீரமைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இனி அணிகள், போட்டிகளுக்கு முன்னதாக ஒதுக்கப்பட்ட பயிற்சி நேரங்களில் மட்டுமே தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

மும்பையின் வான்கடே மைதானம் உட்பட, குறிப்பிட்ட மைதானங்களுக்கு பிசிசிஐ சிறப்பு ஏற்பாடுகளை வகுத்துள்ளது. இங்கு ஒவ்வொரு அணிக்கும், பயிற்சிப் பகுதியில் இரண்டு வலைப் பயிற்சி இடங்களும் (nets), பிரதான ஆடுகளத்தின் ஓரத்தில் ஒரு பக்க விக்கெட்டும் ஒதுக்கப்படும். இரு அணிகளும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்யும்பட்சத்தில், ஒவ்வொரு அணிக்கும் இரண்டு விக்கெட்டுகள் வழங்கப்படும்.

இருப்பினும், அணிகள் தங்களுக்கு ஒதுக்கப்படாத எதிரணிகளின் பயிற்சி இடங்களை பயன்படுத்த கண்டிப்பாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நியாயமான தன்மையைப் பேணவும், பிட்சுகள் அதிகப்படியான பயன்பாட்டைத் தவிர்க்கவும் திறந்தநிலை வலைப் பயிற்சிகள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும், எதிரணிகள் முன்னதாகவே காலி செய்த பிட்சுகளை மற்ற அணிகள் பயன்படுத்தவும் தடை இருக்கிறது. கடந்த சில சீசன்களில் போலவே, போட்டி நாட்களில் பிரதான ஆடுகளத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் அனுமதிக்கப்படாது.
ஐபிஎல் போட்டிகளுக்கான குடும்ப வழிகாட்டுதல்களையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு, 45 நாட்களுக்கும் குறைவான சர்வதேசப் பயணங்களின்போது வீரர்களின் குடும்பத்தினர் தொடர்பைக் குறைக்கும் ஒரு விதி அமலுக்கு வந்தது. அதேபோன்ற விதி இந்த ஐபிஎல் சீசனிலிருந்தும் அமலாகிறது. வீரர்கள் அணிப் பேருந்து மூலம் மட்டுமே மைதானத்திற்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் பயிற்சி நேரங்களில் உடை மாற்றும் அறையிலோ அல்லது களத்திலோ அனுமதி இல்லை. அவர்கள் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட விருந்தினர் பகுதிகளில் இருந்து போட்டிகளைக் கண்டுகளிக்க வேண்டும்.ஒளிபரப்புத் தரத்தை மேம்படுத்த வாரியம் வழிமுறைகளையும் அறிவித்துள்ளது. வீரர்கள் LED விளம்பரப் பலகைகளில் பந்தை அடிப்பதையும், போட்டிகளின் போது அவற்றுக்கு முன்னால் அமர்வதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் தொப்பிகள் போன்ற வெளிப்படையான அடையாளங்கள், நெறிமுறைகளின்படி அணியப்பட வேண்டும். போட்டிக்குப் பிந்தைய விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான ஆடைகளும் கண்காணிக்கப்படும்.விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும்.உரிமையாளர்கள் தங்கள் அணியின் ஜெர்சி எண் மாற்றங்கள் குறித்து வாரியத்திற்கு குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்னதாகத் தெரிவிக்க வேண்டும்.