IPL 2026: முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை காலி செய்த குஜராத்.. கடைசி ஓவர் வரை சென்ற ஆட்டம்
அகமதாபாத்: ஐபிஎல் 2026 தொடரின் பரபரப்பான லீக் ஆட்டம் ஒன்றில், குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. கடைசி வரை பதற்றம் நிறைந்த இந்த ஆட்டம் டைட்டன்ஸுக்கு முக்கியமான வெற்றியாக அமைந்தது.
முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ், ஒரு தடுமாற்றமான தொடக்கத்தைக் கண்டது. 9 ஓவர்களில் 47 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து திணறிய நிலையில், சூர்யன்ஷ் ஷெட்ஜ் 29 பந்துகளில் அதிரடியாக 57 ரன்கள் குவித்தார். மார்கஸ் ஸ்டோனிஸ் (40 ரன்கள்) அவருடன் இணைந்து 44 பந்துகளில் 79 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்து இன்னிங்ஸை மீட்டெடுத்தார்.

ஆனால், இந்த இணை பிரிந்ததும், பஞ்சாபினால் இறுதி ஓவர்களில் ரன் சேர்க்க முடியாமல், 9 விக்கெட்களுக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சில், ஜேசன் ஹோல்டர் 24 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். அவருக்கு ஆதரவாக, ககிசோ ரபாடா 22 ரன்களுக்கு 2 விக்கெட்களையும், முகமது சிராஜ் 28 ரன்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தி சிறப்பாகப் பந்துவீசினர்.
இதையடுத்து 164 ரன்கள் இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது. சேஸிங்கின்போது, குஜராத் டைட்டன்ஸ் 140 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. அப்போது மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் ராகுல் டெவாட்டியா (2 ரன்கள்) எக்ஸ்வியர் பார்ட்லெட் பிடித்த கேட்சால் வெளியேறினார். இதனால், கடைசி 18 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது, ஆட்டம் மேலும் பரபரப்பானது.
மிக முக்கியமான 18வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் அற்புதமாக பந்துவீசி வெறும் 6 ரன்களைக் கொடுத்தார். அதே ஓவரில், ஜேசன் ஹோல்டரின் (2 ரன்கள்) விக்கெட்டையும் கைப்பற்றினார். கூப்பர் கொனோலியின் அபார கேட்சால் ஹோல்டர் வெளியேற, குஜராத் டைட்டன்ஸ்க்கு 152/6 என்ற நிலையில், கடைசி ஏழு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. பிறகு அர்ஷத் கான் களமிறங்கினார்.
கடைசி ஓவரில் 6 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட, பஞ்சாப் அணி சார்பில் மார்கஸ் ஸ்டோனிஸ் பந்துவீச வந்தார். முதல் பந்தே வைடாக அமைய, குஜராத்தின் தேவை 6 பந்துகளில் 10 ரன்களாகியது. இதைத் தொடர்ந்து, அர்ஷத் கான் ஒரு பவுண்டரி அடித்து வெற்றிக்கான ரன் தேவையை சுருக்கினார்.
சூரியன்ஷ் ஷெட்ஜின் சிறப்பான ஃபீல்டிங்கையும் மீறி, அர்ஷத் கான் எடுத்த இரண்டு ரன்கள், குஜராத் அணியின் நம்பிக்கையை அதிகரித்தன. இறுதியாக, வாஷிங்டன் சுந்தர் (22 பந்துகளில் 34 ரன்கள்), கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து, ஒரு பந்து எஞ்சியிருக்க, குஜராத் டைட்டன்ஸ் அணியின் த்ரில் வெற்றியை உறுதி செய்தார்.


Click it and Unblock the Notifications