IPL 2026: டேஞ்சர் அணியாக மாறிய குஜராத் டைட்டன்ஸ்.. பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது எப்படி?
அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2022-ம் ஆண்டு அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி, மிகக் குறுகிய காலத்தில் ஐபிஎல் வரலாற்றின் மிகவும் நிலையான அணியாக உருவெடுத்துள்ளது. இது மற்ற ஐபிஎல் அணிகளுக்கு "டேஞ்சராக" மாறி உள்ளது. முன்பு சிஎஸ்கே அணி எப்படி தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணியாக இருந்ததோ அதே போல குஜராத் அணியும் தான் ஆடிய ஐந்து ஐபிஎல் தொடர்களில் நான்கு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
2026 ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் முதல் பாதியில் பல சறுக்கல்களைச் சந்தித்த போதிலும், அதிலிருந்து மீண்டு வந்து 16 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இது அந்த அணியின் திட்டமிடலையும் மன உறுதியையும் காட்டுகிறது. தனிநபர் ஆட்டத்தை விட ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சியே குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு காரணமாக உள்ளது.

குஜராத் அணியின் வெற்றிக்கு அதன் பந்துவீச்சுப் படை தான் முக்கிய காரணியாக உள்ளது. இன்றைய டி20 கிரிக்கெட்டில் 200 ரன்களுக்கு மேல் எடுப்பது சாதாரணமாகிவிட்ட சூழலில், துல்லியமான பந்துவீச்சு மூலம் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கில்லாடியாக உள்ளது. குறிப்பாக, ககிசோ ரபாடா மற்றும் முகமது சிராஜ் ஜோடி பவர்-பிளே ஓவர்களிலேயே எதிரணிகளுக்கு கடினமான சவாலை அளிக்கிறது. .
இவர்கள் இருவரும் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவதால், குஜராத் அணியால் ஆட்டத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிகிறது. இந்த சீசனில் பவர்-பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அணிகள் பட்டியலில் குஜராத் முதலிடத்தில் உள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் நெருக்கடி கொடுக்க, நடு ஓவர்களில் ரஷித் கான் தனது சுழற்பந்து வீச்சால் ரன் வேகத்தை அடியோடு குறைக்கிறார். விக்கெட்டுகள் கிடைக்காவிட்டாலும், ரன் கொடுக்காமல் அவர் கொடுக்கும் அழுத்தம் பேட்ஸ்மேன்களைத் தவறான ஷாட்களை ஆடத் தூண்டுகிறது. இது குஜராத் அணிக்குச் சாதகமாக முடிகிறது.
பேட்டிங்கில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளார். இந்த சீசனில் 550 ரன்களைக் கடந்துள்ள அவர், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 500 ரன்களுக்கு மேல் குவிக்கும் தனது வழக்கத்தை மாற்றவில்லை. எத்தகைய இக்கட்டான சூழலிலும் பதற்றப்படாமல் ஆடுவது சாய் சுதர்சனின் தனிச்சிறப்பு. அவருக்குத் துணையாகக் கேப்டன் சுப்மன் கில் நிதானமான அதே சமயம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இலக்குகளைத் துரத்துவதில் குஜராத் அணிக்கு நிகர் அந்த அணி தான் என்ற நிலையை இந்த ஜோடி உருவாக்கியுள்ளது.
பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் வழிகாட்டுதலின் கீழ், குஜராத் அணி இக்கட்டான நேரங்களில் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் முதல் 7 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்த குஜராத், பின்னர் ஹைதராபாத்தை 82 ரன்கள் வித்தியாசத்திலும், ராஜஸ்தானை 77 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி மிரட்டியது.
எத்தகைய ஆடுகளமாக இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் குஜராத் டைட்டன்ஸ், இந்த முறையும் கோப்பையை வெல்லும் முனைப்பில் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. வெறும் பங்கேற்பாளராக மட்டுமன்றி, ஒரு வலிமையான போட்டியாளராக குஜராத் அணி திகழ்கிறது.


Click it and Unblock the Notifications
