சென்னை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தியை 2018 ஆம் ஆண்டிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எடுக்கச் சொல்லி தான் பரிந்துரைத்ததாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹர்பஜன் சிங் சிஎஸ்கே அணிக்காக 2 சீசன்களில் விளையாடி 24 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் 2018 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியிலும் அவர் இடம் பெற்றிருந்தார். இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், வருண் ஒரு சாம்பியன் பந்துவீச்சாளர். 2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே வலைப்பயிற்சியின் போது அவரை முதன்முதலில் பார்த்தேன். அப்போதே அவர் பந்துவீச்சை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது.

அதனால் அவரை உடனடியாக அணியில் ஒப்பந்தம் செய்யுமாறு சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூறினேன். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை என்று கூறினார். அதன் பிறகு 2019 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட வருண், 1 போட்டியில் மட்டுமே விளையாடி பின்னர் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார். தற்போது கொல்கத்தா அணியின் முக்கிய தூணாக அவர் திகழ்கிறார்.
சமீபத்தில் நடந்த 2026 டி20 உலகக்கோப்பையில் உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளராக களமிறங்கிய வருண், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். ஆனால் இந்தத் தொடரில் அவரது எகானமி ரேட் 9.25 ஆக இருந்தது. இது அவரது வழக்கமான எகானமியான 7.55 ஐ விட அதிகம். இதுபற்றிப் பேசிய ஹர்பஜன், வழக்கமாக பின்னால் சென்று ஆடும் பேட்ஸ்மேன்களை வருண் எளிதாக வீழ்த்துவார். ஆனால் உலகக்கோப்பையில் பந்தின் லெந்தில் சற்று தவறு செய்ததால் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார் என்றார்.

மேலும், நவீன கிரிக்கெட்டில் மிஸ்டரி பந்துவீச்சாளர் என்று யாரும் இல்லை. பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் இருவருக்கும் இடையேயான போராட்டம்தான் இது. உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அனில் கும்ப்ளேயிடம் இருந்து வருண் சக்கரவர்த்தி பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். கும்ப்ளே தனது உயரத்தைப் பயன்படுத்தி பவுன்ஸர்களை வீசுவார். ஒரே இடத்தில் நாள் முழுவதும் பந்துவீசும் அரிய திறமை அவரிடம் இருந்தது. அதை வருண் பிளேபுக்காகக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தனது ஆலோசனையை வழங்கியுள்ளார்.
