IPL 2026: தோனி விளையாடினால் என்ன, ஓய்வு பெற்றால் என்ன? கவலையில்லை.. சிஎஸ்கே-வை விளாசிய மஞ்ச்ரேக்கர்
மும்பை: தோனி ஐபிஎல் தொடரில் தனது கடைசிப் போட்டியில் விளையாடுகிறாரா இல்லையா என்பது குறித்து தனக்கு எந்தக் கவலையும் இல்லை என்றும், தோனி என்ற பிம்பத்தைக் காக்கப் போய் சிஎஸ்கே நிர்வாகம் ஒட்டுமொத்த அணியையும் சீரழித்துவிட்டதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) நிர்வாகத்தைக் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
நேற்று 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. சென்னை மண்ணில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ஆடும் கடைசிப் போட்டி என்பதால் தோனி இந்தப் போட்டியில் ஆடுவாரா? இந்தப் போட்டியுடன் ஓய்வு பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவர் விளையாடவில்லை. இது குறித்துப் பேசும் போது தான் மஞ்ச்ரேக்கர் கடுமையாக பேசி இருக்கிறார்.

ஸ்போர்ட்ஸ்டார் இணையதளத்தின் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மஞ்ச்ரேக்கர், சிஎஸ்கே நிர்வாகம் தோனி விவகாரத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுச் செயல்படுவதாகக் குறிப்பிட்டார். "தோனி விளையாடுகிறாரா இல்லையா என்பது ஒரு விஷயமே இல்லை. அதைப் பற்றி எனக்கு அக்கறையும் இல்லை. இந்திய அணிக்காக அவர் செய்த சாதனைகளை நான் இப்போதும் மதிக்கிறேன்.
அவர் ஒரு மிகச்சிறந்த கேப்டன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தற்போதைய தோனி அவரது பழைய ஆட்டத்தின் நிழல் மட்டுமே. தோனி என்ற அந்தப் பிம்பத்தைக் கையாள்வதில் சிஎஸ்கே நிர்வாகம் படுதோல்வி அடைந்துவிட்டது. இதன் விளைவாக ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் குழப்பத்தில் உள்ளது" என அவர் சாடினார்.
மேலும் அவர் கூறுகையில், "நிஜமான நிலவரம் மற்றும் வீரர்களின் செயல்பாடுகளைப் பார்க்காமல், ஒரு தனி நபருக்காகச் சிஎஸ்கே அணி நிர்வாகம் உணர்ச்சிவசப்படுவது அந்த அணிக்கு ஒரு பாடமாகும். ஒருவேளை பழைய ஃபார்மில் இருந்த தோனி இந்த 2026 சிஎஸ்கே அணியை வழிநடத்தியிருந்தால், இந்நேரம் அந்த அணி எளிதாக பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கும்.
ஆனால் இப்போதுள்ள தோனி பேட்டிங் வரிசையில் முன்னேறி வந்து விளையாடத் தயாராக இல்லை. வெறும் கடைசி ஓவர்களில் மட்டும் வந்து விளையாடுகிறார். இது வெற்றிக்கான வியூகம் அல்ல, இது வெறும் தோனி என்ற பிம்பத்தைத் தக்கவைக்கும் முயற்சி மட்டுமே" என்றார்.
2026 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாகத் தோனி இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அவருக்குப் பதிலாகப் புதிய வீரர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தாமல், தோனியைத் தக்கவைக்கவே பிசிசிஐ விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதையும் மஞ்ச்ரேக்கர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். பிளே-ஆப் வாய்ப்புக்காகத் தவித்து வரும் சிஎஸ்கே அணிக்கு, மஞ்ச்ரேக்கரின் இந்தக் கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீரர்களை விட அணியின் வெற்றியே முக்கியம் என்பதைச் சிஎஸ்கே நிர்வாகம் உணர வேண்டும் என்றும் அவர் தனது பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications
