டெல்லி: ஐபிஎல் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'இம்பேக்ட் பிளேயர்' விதிக்கு நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் அதிருப்தி தொடர்கிறது. ரோஹித் ஷர்மா, ஹார்திக் பாண்டியாவுக்குப் பிறகு, டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்ஷர் படேல் இந்த விதி தனக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், தனது குறைந்த பந்துவீச்சு பணிச்சுமைக்குக் காரணம் ஒரு விரல் காயம் தான் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
2023 சீசனில் அறிமுகமான இந்த விதி, ஆடும் லெவனில் இருந்து ஒருவரைப் பட்டியலில் உள்ள ஐந்து மாற்று வீரர்களில் ஒருவரால் எந்த நேரத்திலும் மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே, 2023-ல் முதல் இம்பேக்ட் சப் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் நடந்த சீசனுக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில், அக்ஷர் படேல் இம்பேக்ட் பிளேயர் விதி ஆல்-ரவுண்டர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாகக் கூறினார். “நான் ஒரு ஆல்-ரவுண்டர் என்பதால் இந்த விதி எனக்குப் பிடிக்கவில்லை. முன்பு, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிற்கும் ஓர் ஆல்-ரவுண்டரைத் தேர்ந்தெடுப்போம்."

"இப்போதோ, அணி நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளரைத் தேர்வு செய்கிறது, 'ஆல்-ரவுண்டர் எதற்கு?' என்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு இது பிடிக்கவில்லை என்றாலும், விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்,” என்றார் அக்ஷர்.புதிய ஐபிஎல் சீசனுக்கு அக்ஷர் தயாராகி வரும் நிலையில், அவரது குறைந்த பந்துவீச்சு பணிச்சுமை கேள்விக்குள்ளானது.
இதற்குப் பதிலளித்த அவர், கடந்த ஆண்டில் தனது ஓவர்கள் குறைந்ததற்குக் காரணம் வியூகம் இல்லை, மாறாக ஐபிஎல் தொடருக்கு முன் ஏற்பட்ட விரல் காயம் தான் என்று தெளிவுபடுத்தினார்.கடந்த ஐபிஎல் சீசனில் அக்ஷர் 204 பந்துகளும், அதற்கு முந்தைய சீசனில் 264 பந்துகளும் வீசியிருந்தார். இது இம்பேக்ட் பிளேயர் விதியால் அல்ல, மாறாக ஐபிஎல் தொடருக்கு முன் அவரைப் பாதித்த விரல் காயம் காரணமாகவே என்று அவர் விளக்கினார்.

“சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு, என் சுழல் பந்துவீசும் விரல் வெட்டுப்பட்டு, பந்தின் நூலால் மோசமடைந்தது. அது ஆழமான காயமாக மாறியதால், பந்திற்கு அழுத்தம் கொடுக்கவோ, சுழற்சி கொடுக்கவோ முடியவில்லை. அதனால்தான் தேவைப்படும்போது மட்டுமே நான் பந்துவீசி, காயத்தை குணப்படுத்தினேன். ஏழு ஆட்டங்களுக்குப் பிறகு குணமடைந்ததும், நான் மீண்டும் அடிக்கடி பந்துவீசினேன்” என அக்ஷர் தெரிவித்தார்.