IPL 2026: பொய் சொன்னதா ஆர்சிபி? இந்த ஆண்டு ஐபிஎல்-இல் விளையாடாத காரணத்தை போட்டு உடைத்த யாஷ் தயாள்
பெங்களூரு: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தான் பங்கேற்காதது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் முதல்முறையாக வாய் திறந்துள்ளார். பெங்களூரு அணியின் நிர்வாகம் தெரிவித்த காரணத்தை முற்றிலுமாக மறுத்துள்ள அவர், தான் அணியில் இல்லாதது தனது சொந்த முடிவு அல்ல என்று கூறியுள்ளார். இது பெங்களூரு அணி நிர்வாகம் மற்றும் வீரர் இடையே முரண்பாடு நிலவுவதை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு பெங்களூரு அணி முதல்முறையாகக் கோப்பை வென்றதில் 28 வயதான யாஷ் தயாள் முக்கியப் பங்கு வகித்தார். இந்த ஆண்டு அவர் விளையாடாதது குறித்து பெங்களூரு அணியின் கிரிக்கெட் இயக்குனர் மொ போபட் கூறுகையில், "யாஷ் தயாள் தனது தனிப்பட்ட காரணங்களால் விளையாடவில்லை, அவருக்கு அணி நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஒரு நேர்காணலில் பேசிய யாஷ் தயாள், "நான் தொடரில் இருந்து விலகியது எனது தனிப்பட்ட விருப்பம் அல்ல. மேலிடத்து அதிகாரிகளே அந்த முடிவை எடுத்தனர். இதற்கான காரணம் எனக்குத் தெரியாது. டிவியில் போட்டிகளைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
யாஷ் தயாள் மீது ஜெய்ப்பூர் மற்றும் காசியாபாத்தில் பாலியல் புகார்கள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த சட்டச் சிக்கல்களே அவர் இந்த சீசனில் விளையாடாததற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், அணி நிர்வாகத்துடனும், பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்குடனும் தான் தொடர்ந்து பேசி வருவதாகவும், தங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்றும் யாஷ் தயாள் தெளிவுபடுத்தியுள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் தான் ஆடவில்லை என்றாலும் பெங்களூரு அணி அவரை விடுவிக்காமல் தக்கவைத்துள்ளது தனக்கு நம்பிக்கையை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். பெங்களூரு அணி ஏன் உண்மையான காரணத்தை மறைத்தது என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கிடையே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி சிறப்பாக செயல்பட்டு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத உள்ளது.


Click it and Unblock the Notifications
