IPL 2026: சிஎஸ்கே-வின் தோல்விகளுக்கு காரணமே இவர்தான்.. சுத்தமா பேட்டிங்கே வரலை.. கடுப்பான ரசிகர்கள்
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விகளுக்கு அந்த அணியின் கேப்டன் ருதுராஜ்தான் காரணம் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். சிஎஸ்கே அணியை முன்னின்று வழிநடத்த வேண்டிய பொறுப்பில் உள்ளவரே, பந்தை எதிர்கொள்ளத் திணறி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு போட்டிக்கு சராசரியாக 10 பந்துகளை தான் சந்தித்து இருக்கிறார். இவரை அணியில் வைத்திருக்கலாமா அல்லது உடனடியாக நீக்கலாமா என்ற விவாதம் தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி 195 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தியது. அந்த போட்டியில் வெறும் 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே பரிதாபமாக தோல்வியைத் தழுவியது. அதிரடி ஆட்டம் ஆட வேண்டிய இந்த ஆட்டத்தில் கேப்டன் ருதுராஜ் 13 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஏமாற்றம் அளித்தார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் அவரது பேட்டிங் ஃபார்ம் மிகவும் கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் அவர் சந்தித்தது 73 பந்துகள். அதில் அவர் எடுத்தது வெறும் 82 ரன்கள் மட்டுமே. டி20 கிரிக்கெட்டில் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக ஆட வேண்டிய தொடக்க வீரர், பந்துகளை எதிர்கொள்ளவே மிகவும் திணறி வருகிறார்.
பந்துவீச்சாளர்களை அவர் அணுகும் விதமே முற்றிலும் தடுமாற்றமாக இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். டி20 போட்டிகளின் உயிர்நாடியான சிக்ஸர்களை கூட அவர் இந்த சீசனில் மிக மிகக் குறைவான அளவிலேயே அடித்திருக்கிறார். பவர்பிளே ஓவர்களில் அவர் ரன் எடுக்கத் திணறுவது, அடுத்தடுத்து வரும் நடுத்தர வரிசை பேட்ஸ்மேன்களுக்கு தேவையற்ற மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
நடப்பு தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. அணியின் இந்த மோசமான சறுக்கலுக்கு கேப்டன் ருதுராஜின் பேட்டிங் பலவீனமே முக்கிய காரணமாக மாறியுள்ளது. கேப்டன் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், ஒரு தொடக்க வீரராக அவர் ரன் குவிக்கத் தவறினால் அது சிஎஸ்கே அணிக்குத் தொடர்ச்சியான பின்னடைவாகவே மாறும். அடுத்த சில போட்டிகளிலும் இதே நிலை நீடித்தால், அணியின் நலன் கருதி அவரை நீக்குவதைத் தவிர நிர்வாகத்திற்கு வேறு வழியிருக்காது என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications