IPL 2026: சிஎஸ்கே ரசிகர்களிடம் வன்மத்தை கக்கிய இஷான் கிஷன்.. விசில், இன்ஸ்டா பதிவு.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்த வெற்றியில் முக்கியப் பங்காற்றிய ஹைதராபாத் வீரர் இஷான் கிஷன், போட்டி முடிந்த பிறகு சிஎஸ்கே ரசிகர்களை நோக்கிச் செய்த சில சைகைகள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
பிளே-ஆப் வாய்ப்பைத் தீர்மானிக்கும் இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 21 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். பின்னர் 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணியில், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். ஹென்றிச் கிளாசனுடன் இணைந்து அவர் அமைத்த 75 ரன்கள் கூட்டணி ஹைதராபாத் அணியின் வெற்றியை உறுதி செய்தது.

சிஎஸ்கே ரசிகர்களை வம்புக்கு இழுத்த கிஷன்
ஹைதராபாத் அணி வெற்றியை எட்டியதும், மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்களை நோக்கி இஷான் கிஷன் 'விசில் போடு' சைகையைச் செய்து காட்டினார். பின்னர் கைகளை அசைத்து, 'இனி இங்கே வேலை இல்லை, எல்லாரும் வீட்டுக்குக் கிளம்புங்கள்' என்பது போல வெளியேறும் வழியைக் காட்டி ரசிகர்களைக் கிண்டல் செய்தார். சேப்பாக்கம் மைதானத்தின் அதீத சத்தத்தை அமைதியாக்கிய மகிழ்ச்சியில் அவர் இவ்வாறு செய்ததாகத் தெரிகிறது.
இன்ஸ்டாகிராம் பதிவு
மைதானத்தில் காட்டிய ஆக்ரோஷம் போதாதென்று, போட்டிக்குப் பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இஷான் கிஷன் சிஎஸ்கே ரசிகர்களை வம்புக்கு இழுத்துள்ளார். "உங்களது விசில்களை விட எனது பேட் எழுப்பிய சத்தம் தான் இன்று அதிகமாக இருந்தது. பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதியாகிவிட்டோம்" எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சிஎஸ்கே ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இந்தப் போட்டி குறித்துப் பேசிய இஷான் கிஷன், "விக்கெட் கீப்பிங் செய்தபோதே இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு எளிதாக இருக்காது என்பதை உணர்ந்தேன். சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஸ்லோ பந்துகளை எதிர்கொள்வது கடினம். எனவே ஒரு சீனியர் வீரராக கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன்" என்றார்.
இந்த சீசனில் 13 இன்னிங்ஸ்களில் 490 ரன்கள் குவித்துள்ள இஷான் கிஷன், ஆரஞ்சு தொப்பிக்கான பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார். ஹைதராபாத் அணியின் இந்த வெற்றியால் அந்த அணியுடன் சேர்த்து குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சிஎஸ்கே-வின் பிளே-ஆப் வாய்ப்பு தற்போது மற்ற அணிகளின் கையில் உள்ளது.


Click it and Unblock the Notifications

