மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கு இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் அதற்கு தீவிரமான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஐபிஎல் ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை தக்க வைப்பது, எந்த வீரர்களை விடுவிப்பது, எந்த வீரர்களை வேறு அணியிடமிருந்து நேரடியாக வாங்குவது என்பது குறித்து யோசித்து வருகிறது.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சஞ்சு சாம்சனை வாங்கிக் கொள்ளலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இதற்கு தடை போடும் விதமாக ராஜஸ்தான் அணி நிர்வாகம் தங்களுக்கு ஜடேஜாவை தாருங்கள் என்று கேட்டிருக்கிறது.

சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களின் ஒருவராக ஜடேஜா விளங்குவதால் அவரை கொடுக்க சிஎஸ்கே தயக்கம் காட்டி வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் ஜடேஜாவை கண்டெடுத்து பயிற்சி கொடுத்து இன்று பெரிய ஆளாக மாற்றியது.
ஆனால் ராஜஸ்தான் அணிக்கும், ஜடேஜாவுக்கும் ஒரு மிகப்பெரிய பகை ஒன்று கடந்த 15 ஆண்டுகளாக இருக்கிறது.
அது என்னவென்று தற்போது பார்க்கலாம். ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னே பயிற்சியாளராகவும் கேப்டனாகவும் இருந்து ஜடஜாவை நன்றாக வளர்த்து எடுத்தார். இதில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு சீசன்களில் ஜடேஜா பட்டையை கிளப்பினார். இந்த தருணத்தில் தான் ஐபிஎல் 2010 ஆம் ஆண்டுக்கு முன் ஜடேஜா வேறு அணிக்கு செல்ல முயற்சி எடுத்தார்.
இதை விரும்பாத ராஜஸ்தான் அணி நிர்வாகம் ஜடேஜாவுக்கு முட்டுக்கட்டை போட்டது மட்டுமல்லாமல் பிசிசிஐ இடம் ஜடேஜா விதிகளுக்கு மீறி செயல்படுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது. இதை அடுத்து ஜடேஜா 2010 ஆம் ஆண்டு ஐ பி எல் சீசனில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இது ஜடேஜா கிரிக்கெட் வாழ்க்கையில் ஆரம்ப கட்டத்தில் மிகப்பெரிய கரும்புள்ளியாக பார்க்கப்பட்டது. இதையடுத்து 2011 ஆம் ஆண்டு சீசனில் ஜடேஜா கொச்சி டெஸ்கர் அணிக்காக விளையாடினார். அதன்பின் 2012 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சிஎஸ்கே அணிக்காகவும், சிஎஸ்கே தடைப்பட்ட காலத்தில் குஜராத் அணிக்காகவும் ஜடேஜா விளையாடி வருகிறார். தம்மை அவமானப்படுத்திய அணி நிர்வாகமான ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் விளையாட ஜடேஜா கொஞ்சமும் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.