பெங்களூரூ: இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் ஷர்மா, 2026 T20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெறாதபோது, ஹர்திக் பாண்டியா தான் முதலில் தன்னைத் தொடர்பு கொண்டது ஆறுதல் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இந்திய அணியின் தேர்வாளர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷனைத் தேர்ந்தெடுத்ததால், இரண்டாவது விருப்ப விக்கெட் கீப்பராக இருந்த ஜிதேஷுக்கு அணியில் இடம்கிடைக்கவில்லை. முதல் தேர்வு விக்கெட் கீப்பராக சாம்சன் தனது இடத்தைப் பிடித்திருந்தார். இஷான் கிஷன், உள்நாட்டுப் போட்டிகளில் ஜார்கண்ட் அணிக்கு சையத் முஷ்டாக் அலி டிராபியில் வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொடுத்து, மீண்டும் அணிக்குத் திரும்பினார்.

இந்தியா மூன்றாவது முறையாக T20 உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.இது குறித்து பேசிய ஜித்தேஷ் சர்மா, "நான் உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்படாதபோது, அண்ணன் ஹர்திக் தான் முதலில் எனக்குச் செய்தி அனுப்பினார்," என்று கூறினார். "ஒரு நபராகவும், கிரிக்கெட் வீரராகவும் தொடர்ந்து முன்னேறும்படி அவர் அறிவுறுத்தினார்."

"அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், சிவம் துபே போன்ற எனது நல்ல நண்பர்கள் பலரும் எனக்குச் செய்தி அனுப்பினர்." ஹர்திக் பாண்டியாவை மிகவும் உதவும் மனப்பான்மை கொண்டவராக ஜிதேஷ் பாராட்டினார். "நான் சந்தித்தவர்களிலேயே ஹர்திக் பாண்டியா தான் மிகவும் உதவும் மனப்பான்மை கொண்டவர். கேட்காமலேயே குழந்தைகளுக்கு பேட்களை அள்ளித்தரும் அவரைப் போல் ஒருவரை நான் கண்டதில்லை. எனக்கும் அவர் ஒருமுறை ஒரு பேட் கொடுத்தார்."
"க்ருனால் அண்ணா கூட அப்படித்தான், நீங்கள் அழைத்தால் அவர் உங்களுக்கு உதவக் காத்திருப்பார்," என்றும் ஜிதேஷ் தெரிவித்தார். "நானும் பரோடா அணிக்காக விளையாடுவதால், ஹர்திக் உடன் பலமுறை உரையாடியுள்ளேன். அவர் மிகவும் புத்திசாலி கிரிக்கெட் வீரர். தான் என்ன செய்கிறார் என்பதைத் துல்லியமாக அறிந்தவர்" என்று ஜிதேஷ் மேலும் கூறினார்.
க்ருனால் பாண்டியாவின் மைதானத்தில் வெளிப்படும் புத்திசாலித்தனத்தையும் ஜிதேஷ் வெகுவாகப் பாராட்டினார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அவர், புத்திசாலித்தனமாகப் பவுன்சர்களைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்களின் மனதில் அச்சத்தை விதைப்பதாகக் குறிப்பிட்டார். "ஒரு சுழற்பந்து வீச்சாளர் பவுன்சர் வீசுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவர் தான் தொடர்ந்து அதைச் செய்யும் முதல் சுழற்பந்து வீச்சாளர்.

"இது அவரது அணுகுமுறையை காட்டுகிறது. ஒரு பேட்ஸ்மேன் சுழற்பந்து வீச்சாளர் பவுன்சர் வீசி விடுவார் என்று பயப்படுவதை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த அச்சத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார்," என ஜிதேஷ் குறிப்பிட்டார். ஜித்தேஷ் சர்மா தற்போது ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபு அணிக்காக விளையாட ஆயத்தமாகி வருகிறார்.