மும்பை: ஆர்சிபி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், காயம் காரணமாக ஐபிஎல் 2026 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் களமிறங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 28 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடனும், ஏப்ரல் 5 அன்று சென்னை சூப்பர் கிங்ஸுடனும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை அவர் பங்கேற்க மாட்டார்.
ஹேசில்வுட் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச்) கேப்டன் பாட் கம்மின்ஸ் இருவரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். ஆயினும், இந்த இரண்டு மாத ஐபிஎல் சீசனின் பெரும்பகுதியிலும் அவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹேசில்வுட்டின் காயம் கிட்டத்தட்ட சிக்கல் வாய்ந்தது. வலது தொடை எலும்பு காயம் நவம்பர் 2025, நியூ சவுத் வேல்ஸுக்காக ஷெஃபீல்ட் ஷீல்ட் விளையாடியபோது ஏற்பட்டது மற்றும் அதற்கான சிகிச்சையின்போது ஏற்பட்ட கணுக்கால் தசைநார் காயம் என இரு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

இந்தக் காயங்களால் அவர் 2025-26 ஆஷஸ் தொடர் மற்றும் 2026 டி20 உலகக் கோப்பையிலிருந்தும் விலகினார். தற்போது சிட்னியில் இருக்கும் ஹேசில்வுட்டுக்கு, ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் தொடர்களுக்கு முழு உடல் தகுதியை உறுதி செய்வதற்கே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்னுரிமை அளிக்கிறது. அதன் பின்னரே ஐபிஎல் அனுமதி கிடைக்கும். இதனால் அவர் எப்போது திரும்புவார் என தெரியாத நிலையில் முதல் 2 போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் மட்டும் கிடைத்துள்ளது,
இது ஆர்சிபிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். 2025-இல் அணி முதல் ஐபிஎல் பட்டத்தை வெல்ல ஹேசில்வுட் முக்கியமானவர். அவர் 17.55 சராசரியில் சிறப்பாக 22 விக்கெட்டுகளை எடுத்தார்.சின்னசாமி மைதானத்தில் 4 போட்டிகளில் 16.25 சராசரியில் 8 விக்கெட்டுகளை எடுத்தார். புதிய பந்திலும், கடைசி ஓவர்களிலும் அவரது கட்டுப்பாடு மற்றும் சிக்கனமான பந்துவீச்சு ஆர்சிபிக்கு விலைமதிப்பற்றது. நுவான் தஷாரா, ஜேக்கப் டஃபி போன்ற மாற்று வீரர்கள் இருந்தாலும், அவரது பந்துவீச்சை ஈடுசெய்வது கடினம்.

இந்தச் சூழலில், புவனேஷ்வர் குமார் மற்றும் ஆல்-ரவுண்டர் க்ருணால் பாண்டியா போன்றோர் அதிகப் பொறுப்பை ஏற்க வேண்டும். நடப்பு சாம்பியனான ஆர்சிபிக்கு இந்த ஆண்டு கூடுதல் அழுத்தம் உண்டு. சீசனின் தொடக்கத்திலேயே இத்தகைய பெரிய பின்னடைவைச் சமாளிப்பது தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவருக்கு பெரும் சவாலாக அமையும்.