சென்னை: ஐபிஎல் 2026 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஆரம்பத்திலேயே ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் கடந்த சில மாதங்களாகவே காயம் காரணமாக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. அவர் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் ஏப்ரல் மாதத்தில் தான் ஆர்சிபி அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "ஜோஷ் ஹேசில்வுட் இல்லாதது ஆர்சிபி அணிக்கு மிகப் பெரிய இழப்பாகும். அவர் 2 வாரங்கள் விளையாடவில்லை என்றாலும், அதற்குள் அணி 3 அல்லது 4 போட்டிகளில் விளையாடி முடித்திருக்கும். அவர் அணியில் இல்லாததால் வீரர்களின் ஆற்றல் குறைவதோடு, ஒட்டுமொத்த பந்துவீச்சும் பலவீனமடையும். மற்ற அணிகளுக்கு ஆர்சிபி அளிக்கும் அச்சுறுத்தல் 25 சதவீதம் வரை நிச்சயமாகக் குறையும்" என்று கணித்துக் கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்த ஸ்ரீகாந்த், "ஹேசில்வுட்டுக்கு மாற்று வீரராக யாரைக் கொண்டு வந்தாலும் அவரது இடத்தை முழுமையாக நிரப்ப முடியாது. அவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு மிகச்சிறந்த மேட்ச் வின்னர். பந்துவீச்சின் மூலம் களத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அவர் ஏற்படுத்தும் பயம் ஜஸ்பிரித் பும்ராவுக்கு நிகரானது" என்று புகழ்ந்து பேசினார்.

கடந்த ஐபிஎல் 2025 தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றபோது, அந்த அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஹேசில்வுட் தான். அணியின் வேகப்பந்து வீச்சை முன்னின்று நடத்தும் முக்கிய வீரரான அவர், ஏப்ரல் 11 வரை எந்தப் போட்டியிலும் விளையாட மாட்டார் என வெளியாகியுள்ள தகவல் ஆர்சிபி அணி நிர்வாகத்திற்கும், அந்த அணியின் ரசிகர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
