“இந்தியாவிலேயே ஆபத்தான பேட்ஸ்மேனாக உன்னை மாற்றுவேன்”.. முகுல் சவுத்ரியிடம் ஜஸ்டின் லாங்கர் சபதம்
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் இளம் வீரர் முகுல் சவுத்ரி ஒரே இரவில் கிரிக்கெட் உலகின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசி நேரத்தில், கடும் அழுத்தத்துக்கு இடையே அவர் ஆடிய அதிரடி ஆட்டம் லக்னோ அணிக்கு 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றுத் தந்தது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக லக்னோ அணி சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், பயிற்சி முகாமின் போது முகுல் சவுத்ரியிடம் ஒரு முக்கியமான சவாலை விடுத்தார். "அடுத்த 4 மாதங்களில், இந்தியாவிலேயே 6 அல்லது 7வது இடத்தில் ஆடும் ஆபத்தான பேட்ஸ்மேனாக உன்னை நான் மாற்றுவேன்" என்பதே லாங்கரின் அந்த சபதம். அதனை தற்போது ஈடன் கார்டன்ஸில் முகுல் சவுத்ரி நிஜமாக்கிக் காட்டியுள்ளார்.

ஆட்டத்தின் 16வது ஓவர் முடிவில் லக்னோ அணி 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. அப்போது 7வது வீரராகக் களமிறங்கிய முகுல், எந்தவித பயமும் இன்றி பந்தை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் குவித்தார். இதில் 2 பவுண்டரிகள் மற்றும் 7 இமாலய சிக்சர்கள் அடங்கும். குறிப்பாக கடைசி 19 பந்துகளில் மட்டும் அவர் 52 ரன்களை விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
வெற்றி குறித்துப் பேசிய முகுல் சவுத்ரி, "கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே எனது திட்டம். அழுத்தத்தைப் பற்றி கவலைப்படாமல், எனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினேன். பந்து எனது பகுதிக்கு வந்தால் அதை அடிப்பது தான் எனது பாணி. பந்துவீச்சாளர் 4 பந்துகளை மிகச் சிறப்பாக வீசினாலும், ஒரு பந்து நிச்சயம் எனக்கு சாதகமாக வரும் என்று காத்திருந்தேன்" எனத் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு பகுதியைச் சேர்ந்த இந்த 21 வயது வீரரின் பின்னணியும் நெகிழ்ச்சியானது. தனது தந்தை கண்ட கிரிக்கெட் கனவை நனவாக்கவே அவர் களமிறங்கியுள்ளார். 13 வயதில் கிரிக்கெட் ஆடத் தொடங்கி ஜெய்ப்பூர் மற்றும் குருகிராம் எனப் பல இடங்களுக்குச் சென்று பயிற்சி பெற்று இன்று ஐபிஎல் அரங்கில் ஜொலித்து வருகிறார். ஜஸ்டின் லாங்கரின் பயிற்சியும், முகுலின் தன்னம்பிக்கையும் இணைந்து லக்னோ அணிக்கு ஒரு சிறந்த பினிஷரை தந்துள்ளதை இந்தப் போட்டி உறுதி செய்துள்ளது. இதன் மூலம் லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது.


Click it and Unblock the Notifications