மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் கேமரூன் கிரீன் பந்துவீசாதது குறித்து அந்த அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு பதிலடி கொடுத்து இருக்கிறது.
கடந்த ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுமார் 25.20 கோடி ரூபாய் என்ற பெரிய தொகையைக் கொடுத்து ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை வாங்கியது. அவர் ஒரு ஆல்-ரவுண்டர் என்பதால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அணியின் வெற்றிக்கு உதவுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மும்பை அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் அவர் ஒரு ஓவர் கூட பந்துவீசவில்லை. இது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

போட்டிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் இது குறித்துக் கேட்கப்பட்டபோது, கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே மிகவும் கோபமாகப் பதிலளித்தார். அவர் கூறுகையில், "ஏன் கிரீன் பந்துவீசவில்லை என்று நீங்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம்தான் கேட்க வேண்டும். அவர் பந்துவீசத் தொடங்கினால் மட்டுமே எங்கள் அணியின் சமநிலை சரியாக இருக்கும். தற்போது பந்துவீச்சில் அந்தப் பற்றாக்குறை தெரிகிறது. அவர் விரைவில் பந்துவீசுவார் என்று நம்புகிறேன்" என்று காட்டமாகத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பிய நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. கேமரூன் கிரீனுக்கு முதுகுப் பகுதியின் கீழ் பகுதியில் காயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் போது ஏற்பட்ட இந்தக் காயத்தைக் கருத்தில் கொண்டு, அவருக்குப் பந்துவீசத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த விளக்கத்தில், கேமரூன் கிரீன் இன்னும் 10 முதல் 12 நாட்களுக்கு அவர் பந்துவீச மாட்டார். 2026-27 சீசனில் நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் போன்ற முக்கியப் போட்டிகளுக்காக வீரர்களின் உடல்நலனைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் போன்றோருக்கும் இதேபோன்ற பணிச்சுமை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பேட்டிங்கிலும் கிரீன் வெறும் 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றிய நிலையில், இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியும் அவர் ஒரு முழுமையான ஆல்-ரவுண்டராகப் பங்களிக்க முடியாமல் போனது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.