IPL 2026: தோல்வி வலியே போகலை அதற்குள் பிசிசிஐ தந்த தண்டனை.. நொந்து போன KKR கேப்டன் ரகானே
சென்னை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்த சோகத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, பிசிசிஐ மற்றொரு அடியைக் கொடுத்துள்ளது. மெதுவான ஓவர் ரேட் காரணமாக அந்த அணியின் கேப்டன் அஜிங்க்யா ரகானேவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத கொல்கத்தா அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்தத் தோல்வி ஒருபுறம் வலிக்க, மறுபுறம் அந்த அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது நிர்வாகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தண்டனை ஏன்?
சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தபோது, கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை. இது ஐபிஎல் நடத்தை விதிகளின்படி குற்றமாகும். இந்த சீசனில் கொல்கத்தா அணி செய்யும் முதல் தவறு என்பதால், ஐபிஎல் விதி 2.22-ன் படி கேப்டன் ரகானேவுக்கு மட்டும் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த போட்டிகளிலும் இதே தவறு தொடர்ந்தால், அபராதத் தொகை அதிகரிப்பதோடு கேப்டனுக்கு தடையும்கூட விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சொதப்பிய பேட்டிங்
முன்னதாக 193 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, ஆரம்பம் முதலே திணறியது. முதல் 6 ஓவர்களான பவர்பிளேவில் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. நூர் அகமதுவின் சுழலில் சிக்கிய கேப்டன் ரகானே 28 ரன்களில் வெளியேறினார். சுனில் நரைன், ரிங்கு சிங் போன்ற அதிரடி வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
கேப்டன் ரகானே வேதனை
தோல்வி குறித்து பேசிய ரகானே, "எங்கள் பேட்டிங்கில் எந்த ஒரு வேகமும் இல்லை. பவர்பிளே ஓவர்களில் நாங்கள் மிகவும் மெதுவாக ஆடிவிட்டோம். அதேபோல் நடுப்பகுதியில் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. யாராவது ஒரு பேட்டர் கடைசி வரை நின்று விளையாடி இருக்க வேண்டும். தற்போது இருக்கும் சூழல் எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. ஒரு அணியாக நாங்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும். இனி வரும் போட்டிகளில் அணியின் வீரர் தேர்வில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் 4 தோல்விகளைச் சந்தித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியும் என்ற நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications