கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே பயிற்சி ஆட்டத்தில் 20 பந்துகளில் அரைசதம் விளாசி மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கிய ரஹானே, அதிரடியாக விளையாடி வெறும் 25 பந்துகளில் 58 ரன்களை விளாசினார். இதில் 20 பந்துகளிலேயே அவர் தனது அரைசதத்தை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் அணியில் உள்ள மற்ற பேட்ஸ்மேன்களுக்கு விளையாட வாய்ப்பளிக்கும் வகையில் அவராகவே தானாக முன்வந்து களத்தில் இருந்து வெளியேறினார்.
கடந்த 2025 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி 14 போட்டிகளில் 5 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டு ஏமாற்றம் அளித்தது. இருப்பினும், கடந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 147.73 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 390 ரன்களை குவித்து அணியின் அதிக ரன் குவித்தவராக இருந்த 37 வயதான ரஹானேவையே இந்த ஆண்டும் கேப்டனாக அணி நிர்வாகம் தொடர்ந்து ஆதரித்துள்ளது.

புதிய சீசன் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஹானே, "ஒரு வீரராகவும் கேப்டனாகவும் ஒவ்வொரு ஆண்டும் புதிய சவால்கள் இருக்கும். சவால்களை எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதையே எனது பயணத்தில் கற்றுக்கொண்டேன். கேப்டனாக எனக்கு பொறுப்பு வழங்கிய அணி நிர்வாகத்திற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த தொடர் மிகவும் நீளமானது. எனவே தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். தொடர் முழுவதும் சில தவறுகள் நடக்கலாம், ஆனால் ஒரு அணியாக நேர்மறையான கிரிக்கெட்டை விளையாடுவதே எங்கள் இலக்கு" என்று கூறினார்.
இந்த ஆண்டு கொல்கத்தா அணி பேட்டிங்கில் பல அதிரடி மாற்றங்களுடன் களமிறங்குகிறது. ஆண்ட்ரே ரசல், வெங்கடேஷ் ஐயர் போன்ற அனுபவ வீரர்களை விடுவித்த அந்த அணி, ஏலத்தில் கேமரூன் கிரீனை 25.20 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அணியில் ஃபின் ஆலன், டிம் சீஃபெர்ட் போன்ற அதிரடி வீரர்களுடன் சுனில் நரைன் மற்றும் ரஹானேவும் உள்ளனர்.

அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலுவாக உள்ளதாக கூறிய ரஹானே, போட்டிக்கான பிளேயிங் லெவன் ரகசியத்தை இப்போது வெளியிட முடியாது என்று கூறிவிட்டார். வெளிநாட்டு வீரர்கள் உட்பட அனைவரும் மிகச் சிறந்த ஃபார்மில் இருப்பதாகவும், இந்த சீசனை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும் ரஹானே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
