கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முழங்கால் காயம் காரணமாக அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா இந்த சீசன் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார்.
இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்திருந்த ஹர்ஷித் ராணா, பயிற்சி போட்டியின் போது காயமடைந்தார். இதனால் பிப்ரவரி 9 அன்று அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடந்த மருத்துவ பரிசோதனைகளின்படி, அவர் மீண்டும் முழு உடற்தகுதியை எட்ட காலதாமதம் ஆகும் என்பதால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என உறுதியாகியுள்ளது.

கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா மிக முக்கிய பந்துவீச்சாளராக செயல்பட்டு வந்தார். குறிப்பாக 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி கோப்பையை வென்ற போது, அந்த சீசனில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதைத் தொடர்ந்து கடந்த சீசனில் 4 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்ட அவர், மேலும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது விலகல் கொல்கத்தா அணியின் பந்துவீச்சு கூட்டணியில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் அணியில் உள்ள வைபவ், உம்ரான், கார்த்திக் மற்றும் ஆகாஷ் போன்ற மற்ற இளம் பந்துவீச்சாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து நட்சத்திர வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசராபனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய முசராபனி, மார்ச் 17 அன்று கொல்கத்தா வந்து அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, கொல்கத்தா அணியின் மற்றொரு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானாவும் டி20 உலகக்கோப்பையின் போது காயமடைந்தார். அவர் தற்போது இலங்கையில் காயத்திலிருந்து மீண்டு வருவதால், ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாடுவது சந்தேகமாகவே உள்ளது. தொடர்ச்சியாக முக்கிய பந்துவீச்சாளர்கள் காயமடைந்து வருவது கொல்கத்தா அணி நிர்வாகத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
