மும்பை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிறகு அதிக கோப்பைகளை வென்ற அணி என்றால் அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான். 2012, 2014 மற்றும் 2024 ஆகிய மூன்று சீசன்களிலும் கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் கேகேஆர் அணி கடந்த முறை எட்டாவது இடத்தையே பிடித்தது. 14 போட்டிகளில் விளையாடி வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வென்றது. 7 போட்டிகளில் தோல்வியை தழுவியது. ரகானே தலைமையிலான கேகேஆர் அணி எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.

குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த மெகா ஏலத்தில் 23 கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து தமிழக வீரர் வெங்கடேசனை தக்க வைத்துக் கொண்டது. ஆனால் அவர் அதற்கு தகுந்தார் போல் பேட்டிங்கில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 11 போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 142 ரன்கள் தான் அடித்திருந்தார்.
இதனால் கே கே ஆர் அணி அவரை விடுவித்து இருக்கிறது. இதேபோன்று கொல்கத்தா அணியில் முக்கிய தூணாக விளங்கும் ஆண்ட்ரூ ரஸிலும் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். தென்னாபிரிக்க வேகப்பந்துவீச்சாளர் அண்ரிச் நோக்கியா 6.30 கோடி கொடுத்து வாங்கப்பட்ட நிலையில் அவரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
இதேபோன்று தென்னாபிரிக்க வீரர் குயின்டன் டிக்காக் மூன்று கோடி 60 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட நிலையில் அவரும் நீக்கப்பட்டிருக்கிறார். 2 கோடியே 80 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனும் நீக்கப்பட்டிருக்கிறார்.
அதேபோன்று ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட நிலையில் அவரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மோயின் அலி 2 கோடி ரூபாய் கொடுத்து கே கே ஆர் அணி வாங்கியது. அவரும் தற்போது நீக்கப்பட்டிருக்கிறார்.
இதேபோன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத லவ்லித் சிசோதியா, சேட்டன் சக்கரியா ஆகியோரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் கே கே ஆர் அணியிடம் 64 கோடியே 30 லட்சம் ரூபாய் எஞ்சி இருக்கிறது. வரும் மினி ஏலத்தில் 13 வீரர்களை அந்த அணி தேர்வு செய்ய வேண்டும்.