IPL 2026: தரையோடு தரையாக பந்தை பிடித்த வருண்.. உறைந்து போன அபிஷேக்.. அம்பயர் செயலால் அதிருப்தி
கொல்கத்தா : 2026 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில், அதிரடி வீரர் அபிஷேக் சர்மாவின் விக்கெட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மூன்றாம் அம்பயரின் இந்த முடிவால் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் மற்றும் வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. பவுண்டரியும் சிக்ஸர்களுமாக விளாசிய அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் குவித்து அரைசதத்தை நெருங்கினார்.

அப்போது பிளெஸ்ஸிங் முசரபானி வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை அபிஷேக் சர்மா லெக் சைடில் தூக்கி அடித்தார். அங்கு ஃபீல்டிங் நின்றிருந்த வருண் சக்கரவர்த்தி ஓடி வந்து பந்தை தரையோடு தரையாக கேட்ச் பிடித்தார். கொல்கத்தா வீரர்கள் உடனடியாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பந்து தரையில் பட்டிருக்கலாம் என சந்தேகித்த அபிஷேக் சர்மா களத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே நின்றார். இதனால் கள அம்பயர்கள் முடிவை மூன்றாம் அம்பயரான நிதின் மேனனிடம் வழங்கினர்.
டிவி ரீப்ளேயில் பல கோணங்களில் வீடியோ பரிசோதிக்கப்பட்டது. சில கோணங்களில் வருண் சக்கரவர்த்தியின் விரல்கள் பந்துக்கு அடியில் இருப்பது போலவும், மற்ற சில கோணங்களில் பந்து லேசாக புற்களில் உரசிக் கொண்டிருப்பது போலவும் தெரிந்தது. ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியாத அளவுக்கு வீடியோ இருந்ததால், கள அம்பயரின் முடிவை மாற்றுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி மூன்றாம் அம்பயர் அதை 'அவுட்' என அறிவித்தார்.
அதிருப்தி
அம்பயரின் இந்த முடிவால் கடும் அதிருப்தி அடைந்த அபிஷேக் சர்மா, மைதானத்தை விட்டு வெளியேறும்போது தனது விரக்தியை வெளிப்படுத்தியபடியே சென்றார். ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியும் அம்பயர்களிடம் இதுகுறித்து அதிருப்தியுடன் விவாதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக கார்த்திக் தியாகி பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் 46 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதனைத் தொடர்ந்து ஒரே ஓவரில் இஷான் கிஷன் 14 ரன்களுக்கும், அபிஷேக் சர்மாவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஏதுமின்றி பலமான நிலையில் இருந்த ஹைதராபாத் அணி, இந்த சர்ச்சைக்குரிய விக்கெட்டுக்கு பிறகு தனது ரன் வேகத்தை இழந்தது. கொல்கத்தா அணி மீண்டும் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.


Click it and Unblock the Notifications