“ஆடுகளம் திடீரென மாறியது.. எங்களை ஏமாற்றியது”.. தோல்விக்கு பின் KKR கேப்டன் அஜிங்க்யா ரஹானே புலம்பல்
கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணான ஈடன் கார்டன்ஸில் சந்தித்த இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்களில் 161 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. 227 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி விளையாடிய போது, பேட்டிங்கில் ஒரு சிறப்பான கூட்டணி அமையாததே தோல்விக்கு முக்கிய காரணம் என அந்த அணியின் கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் முதல் 6 ஓவர்களில் 78 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை பெற்றோம். ஆனால் அந்த நேரத்தில் கேமரூன் க்ரீன் ரன் அவுட் ஆனது எங்களுக்கு பின்னடைவை தந்தது. நிலைத்து நின்று ஆடிய பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை இறுதிவரை கொண்டு சென்றிருக்க வேண்டும். பெரிய இலக்கை விரட்டும்போது மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப் மிகவும் அவசியமானது, ஆனால் அது இன்று எங்களுக்கு அமையவில்லை" என்றார்.

ஆடுகளத்தின் தன்மை குறித்தும் ரஹானே தனது கருத்தை பதிவு செய்தார். "முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் சற்று வித்தியாசமாக செயல்பட்டது. பந்து பேட்டிற்கு வருவதற்கு சற்று தாமதமானது. போகப் போக ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறும் என நினைத்தோம். ஆனால் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் இந்த நிலைமையை உணர்ந்து ஸ்லோவர் பந்துகளை அருமையாக பயன்படுத்தினர். இருப்பினும் இதை நாங்கள் தோல்விக்கான ஒரு சாக்காக சொல்ல விரும்பவில்லை" என ரஹானே கூறினார்.
அடுத்தடுத்த போட்டிகளுக்கான திட்டம் குறித்து பேசிய அவர், "சொந்த மண்ணில் வெற்றி பெறுவது எப்போதுமே மிகவும் முக்கியமானது. இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அணியின் காம்பினேஷனில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என யோசிப்போம். பேட்டிங் வரிசையை வலுப்படுத்த கூடுதல் பேட்ஸ்மேனை ஆடும் லெவனில் சேர்ப்பது குறித்தும் ஆலோசிப்போம். எங்களுக்கு அடுத்த போட்டிக்கு 3 அல்லது 4 நாட்கள் வரை இடைவெளி உள்ளது. பேட்டிங்கில் இது எங்களுக்கு ஒரு மோசமான நாள், அவ்வளவுதான். கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டோம். எனவே வீரர்கள் அனைவரும் நேர்மறையான எண்ணத்துடன் அடுத்த போட்டியை எதிர்கொள்வோம்" என ரஹானே நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications